புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனேஷியாவில் மிக பயங்கர நிலநடுக்கம்-28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை-சென்னை-பெங்களூரிலும் தாக்கம

ஜகார்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று பகல் 2 மணிக்கு (இந்தோனேஷிய நேரப்படி இரவு 7 மணிக்கு) இந்தியப் பெருங் கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.

இதையடுத்து அந்தநான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சென்னை, மதுரை, பெங்களூர், கொல்கத்தா, கொச்சி, குவஹாத்தி உள்பட பல்வேறு நகர்களிலும் கட்டடங்கள் மிக பயங்கரமாக நடுங்கியதால் மக்கள் பீதியில் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
  Read:  In English 
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் இதே பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான மிக பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகம், இலங்கை உள்பட உலகம் முழுவதும் 2.3 லட்சம் பேரை பலி கொண்டது நினைவுகூறத்தக்கது.

இப்போதும் இந்த நிலநடுக்கத்தால் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தை இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளி்லும் மக்கள் உணர்ந்துள்ளனர். முன்னதாக இந்த நிலநடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டராக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது 8.7 ரிக்டர் அளவுக்கே இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: