வியாழன், 12 ஏப்ரல், 2012

அமைச்சர்களுக்காக புதுக்கோட்டையில் 32 வீடுகள் ரெடியா? இல்லையா?

Viruvirupu
தமிழக அமைச்சர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சங்கரன்கோவில் கடும் உழைப்பைக் காட்டிவிட்டு, சற்றே ரிவாக்ஸ் பண்ணலாம் என்றால், மீண்டும் பெட்டி படுக்கையுடன் புதுக்கோட்டைக்கு
புறப்பட தயாராக வேண்டும் போலிருக்கிறது.
பாவம் நம்ம அமைச்சர்கள். சொந்த ஊரில் ஒரு வீடு, பின்கட்டில் பசுமாடு, சென்னையில் ஒரு பங்களா, அதில் ஜெனரேட்டர் கனெக்ட் பண்ணப்பட்ட ஏ.சி. வசதி… இவ்வளவும் இருந்தென்ன, சங்கரன்கோவிலிலும், புதுக்கோட்டையிலும் ஓடியோடி டெம்பரரியாக வீடு பிடிக்க வேண்டி உள்ளது.
அவர்கள் வீட்டு இல்லத்தரசிகளால், “நம்ம வீட்டுக்காரர் உத்தியோகம் பார்க்க கோட்டைக்கு போயிருக்கிறார்” என்றுகூட பெருமையாக நாலு பேருக்கு கூறமுடியாமல் உள்ளது.

இந்த லட்சணத்தில், கடும் வெயிலடிக்கும் கோடைகாலம் வேறு! பாதி அமைச்சர்களுக்கு முகத்தில் மினுமினுப்பே போய்விட்டது. அடுத்த தேர்தலில் பழைய போட்டோவை வைத்தா போஸ்டர் அடிப்பது?
புதுக்​கோட்டைத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூ​னிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட முத்துக்குமரன் எதிர்​பாராத விபத்தில் சிக்கி மரணமடையவே, அங்கு இடைத் தேர்தல் வருகிறது.
“இந்தியக் கம்யூ​னிஸ்ட் கட்சி ஜெயித்த தொகுதியை அவர்களுக்கே விட்டுக் கொடுக்கலாம்” என்று நம்ம அமைச்சர்களில் யாராவது கட்சித் தலைவிக்கு ஆலோசனை கூறலாம்தான். ஆனால், தலைவியுடன் எடுக்கப்படும் போட்டோக்களிலேயே அவர்கள் வாய் பொத்தி காட்சி தருகிறார்கள்.
அம்மாவுக்கு முன் நிற்கும்போது, காலில் எறும்பு கடித்தாலும் குனிய முடியாத நிலையில், கட்சி முடிவுகளில் இவர்கள் எங்கே ஐடியா கொடுப்பது?
எனவே, வேறு வழியில்லை. அம்மா பெரு விரலையும், நடு விரலையும் சுண்டி, ஆள்காட்டி விரலால் காட்டப்போகும் புதுக்கோட்டை இருக்கும் திசையை நோக்கி பாய வேண்டியதுதான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவு செய்யப்படும் முன், புதுக்கோட்டைத் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக இருந்தது. அக் கட்சியின் வேட்பாளராக அம்மா அறிவித்த நபர், முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கருப்பையா. பாவம் இந்த கருப்பையா, அவரது பெயர் பேப்பரில் வந்து 24 மணி நேரத்திலேயே, தொகுதி கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட அறிவிப்பை அம்மா வெளியிட்டார்.
இப்போது, தனது 24 மணிநேர எம்.எல்.ஏ. கனவு மீண்டும் பலிக்குமா என்ற பதைபதைப்பான கேள்வியுடன் உள்ளார் கருப்பையா. அவரது கேள்விக்கு எந்த அமைச்சராலும் பதில் கூற முடியாது. பாவம், அவர்களுக்கே தெரிந்தால்தானே!
வேட்பாளர் நியமனத்தில், கருப்பையாவுடன் போட்டிபோட பெரிய திருவிழா கூட்டமே துடிப்பாக நிற்கிறது.
முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.சி ராமையா, இம்முறை வாய்ப்பு தமக்குதான் என்று தொகுதி முழுக்க சொல்லி வருகிறார். முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், “மாம்பழம் எனக்கே” என்று ஓ.பி.எஸ்.ஸை சுற்றி வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், அ.தி.மு.க. தலைமைச் செயலகத்தில் ‘ஆள்’ ரெடி பண்ணிவிட்டார் என்று பேச்சு அடிபடுகிறது.
தற்போதைய நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தொண்டைமான், “நம்ம திறமைக்கு இந்த சிறிய பதவியில் இருப்பதா?” என்று எம்.எல்.ஏ. கனவில் உள்ளார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனின் மனைவி சுபத்ரா தேவியும், வேட்பாளராக முயற்சிக்கிறார். அவர்களைவிட, மாணவர் அணி, இளைஞர் அணி, காலில் விழுவோர் அணி என்று பல அணிகளைச் சோந்த ஆட்கள், “நான் ரெடி.. நீங்க ரெடியா?” என்று தயார் நிலையில் உள்ளனர்.
முன்பெல்லாம், வேட்பாளராவது எவ்வளவு சுலபம்? “காசை ரெடி பண்ணினோமா, ராவணனை போய் பார்த்தோமா” என்று சிம்பிளாக லிஸ்டுக்குள் புகுந்து விடலாம். என்னங்க சோதனை இது!
புதுக்கோட்டைவாசிகளே… விரைவில் உங்கள் தொகுதியை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசீர்வதிப்பார்கள். அத்துடன் இலவச இணைப்பாக முப்பத்திரெண்டு அமைச்சர்களும் வந்து நிற்பார்கள். என்ஜாய்!

கருத்துகள் இல்லை: