திங்கள், 5 மார்ச், 2012

உத்தர பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கப் போகின்றன?

இந்தியாவின் மினி பொதுத் தேர்தல் என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. அத்தனைக்குமான தேர்தல் முடிவு, நாளை (6ம் தேதி) வரவுள்ளது.சின்ன மாநிலங்கள் என்பதால், மணிப்பூர் மற்றும் கோவா பற்றிய முக்கியத்துவம் அதிகரிக்கவில்லை. கிட்டத்தட்ட தெரிந்தது தான் என்பதால், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் பற்றிய ஆர்வமும் அதிகம் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே, அகில இந்திய அளவில் ஆர்வத்தைத் தூண்டும் தேர்தலாக, உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தல் இருந்தது. மொத்தமுள்ள, 75 மாவட்டங்களில், 403 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்ததால், அதன் பிரமாண்டம் அரசியல்வாதிகளையும், அரசியல் நோக்கர்களையும் ஈர்த்தது.
தேசியக் கட்சிகளின் எதிர்காலம், ஒரு கட்சி ஆட்சி முறை, மாயாவதிக்கு கிடைக்கும் மதிப்பெண்கள், மத்தியில் மாறும் அரசியல் சமன்பாடுகள் என, பல்வேறு விஷயங்களை நிர்ணயிக்கும் சக்தி, உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு உள்ளது.முன்னெப்போதும் இல்லாத அளவு, ஏழு கட்டங்களாக, அங்கு ஓட்டுப் பதிவுகள் நடத்தப்பட்டன. குறிப்பிடத்தக்க வன்முறைச் சம்பவம் எதுவுமின்றி, தேர்தலை நடத்திக் காட்டியதன் மூலம், தனது கடமையை செவ்வனே முடித்துள்ளது கமிஷன். ஓட்டுப் பதிவே அமைதியாக முடிந்துவிட்ட நிலையில், ஓட்டு எண்ணிக்கையில், பெரிய சம்பவங்கள் நடக்கும் சாத்தியமில்லை. ஆனால், அந்த ஓட்டு எண்ணிக்கையில் வெளிப்படப் போகும் தேர்தல் முடிவுகள் என்ன என்பதில் தான், அத்தனை பேருக்கும் ஆர்வம்.ஆட்சியின் மீதான அதிருப்தி, பெருமளவில் இருந்தாலும், சரியான மாற்றுக் கட்சி இல்லாததாலும், ஓட்டு வங்கியில் எந்தப் பிளவும் இல்லாததாலும், கருத்துக் கணிப்புகள் சொல்வதைப் பற்றி கவலைப்படாமல், மீண்டும் நம் ஆட்சி தான் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார் மாயாவதி.அதிருப்தி அலையை

முற்றிலும் பயன்படுத்திக்கொண்ட மகிழ்ச்சியிலும், புதிய தளபதியாக உருவெடுத்திருக்கிற அகிலேஷ் சிங்கின் வழிநடத்துதலிலும், ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற உற்சாகத்தில் உள்ளார் முலாயம் சிங் யாதவ். சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி, அதற்கு தனக்கு கை கொடுக்கும் என்றும் நம்புகிறார். அதற்கேற்ற வகையில், "என் தந்தையே முதல்வர்' என்கிறார் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ்.தேசிய அளவில், காங்கிரசுக்கு விழுந்துள்ள ஊழல் முத்திரை, மாநிலத்திலும் புரையோடிவிட்ட ஊழல் புகார்கள், தங்கள் கட்சிக்கும், வாஜ்பாய், அத்வானிக்கும் உள்ள நல்ல பெயரைப் பயன்படுத்தி, முந்தைய எண்ணிக்கையை முந்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது, பா.ஜ., மேலும், உமாபாரதியின் பிரசாரமும் தங்களுக்கு கைகொடுக்கும் என நினைக்கிறது. ராகுலின் அயராத உழைப்பு, முஸ்லிம்களின் ஓட்டு பிளவுபடுவது, தூங்கிக் கிடந்த கட்சியின் ஓட்டு வங்கியில் புத்துணர்வு ஆகியவற்றைக் கொண்டு, தேர்தலில் முத்திரை பதித்துவிடலாம் என, சந்தோஷத்தில் இருக்கிறதுகாங்கிரஸ்.ஆனால், நேற்று முன்தினம் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளோ, சமாஜ்வாடி கட்சியே அதிக இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வரும். பகுஜன், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் முறையே, இரண்டு, மூன்று, நான்காம் இடங்களைப் பெறும் என தெரிவித்துள்ளன.
எது பலிக்கப் போகிறது? எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கப் போகின்றன? உத்தர பிரதேசத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? என்பதை அறிய, ஜான்சியில் இருந்து வாரணாசி வரை, கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் என சென்று, படித்தவர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், அரசியல்வாதிகள் என, அத்தனை தரப்பினரையும் சந்தித்த போது, சில தகவல்களை யூகிக்க முடிந்தது.அது யாதெனில், உ.பி.,யின் தனிப்பெரும்
கட்சியாக சமாஜ்வாடி திகழும் என வெளியான கருத்துக் கணிப்புகள், நாளை தேர்தல் முடிவுகள் வரும் போது சரியாக இருக்கும் என்பதே. உ.பி.,யில், அதிக அளவில் ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதும், இதை உறுதி செய்வதாக உள்ளது.தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் போது, குட்டிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் தயவில் ஆட்சி அமைக்க, முலாயம் சிங் முற்படுவார். அ@த @நரத்தில் கருத்து கணிப்பு முடிவுகளால் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் கவலை அடைந்துள்ளார் என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."குப்பையில் தூக்கிப் போட வேண்டியது'"ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக, "டிவி' சேனல்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் எல்லாம், குப்பையில் போட வேண்டியவை. அவை எல்லாம் மோசடியானவை. உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி வியக்கத்தக்க வெற்றி பெறும்' என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:"உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களைப் பிடித்து, தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்தைப் பிடிக்கும்' என, "டிவி' சேனல்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய இந்தக் கருத்துக் கணிப்புகளை எல்லாம் நம்ப முடியாது. அதை, நான் 101 சதவீதம் நிராகரிக்கிறேன். ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் மோசடியானவை. மொத்தம், 12 கோடி வாக்காளர்களின் மனதில் உள்ளதை, ஒரு சிறு சர்வே மூலம் எப்படி கண்டறிய முடியும்? கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் எல்லாம் சரியாக இருந்துள்ளனவா? கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி வியக்கத்தக்க வெற்றி பெறும். காங்கிரஸ், 100 இடங்கள் வரை பெறும். சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெறுவது என்பது நடக்காத காரியம். உ.பி., மாநிலத்தில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சி அமைக்க முற்படும். மற்றபடி, எதிர்க் கட்சியாகவே அமரும் என்றார்.- ஆர்.ரங்கராஜ் பாண்டே

கருத்துகள் இல்லை: