செவ்வாய், 6 மார்ச், 2012

UP சமாஜ்வாடி 224,பகுஜன் சமாஜ் கட்சி 77,பாஜக 49,காங்கிரஸ் 39

டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசும் பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.
உத்தர்கண்ட் மாநிலத்தில் பாஜகவும் காங்கிரசும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளன. பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கோவாவில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறித்துள்ள. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
முலாயம் மாபெரும் வெற்றி:
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் சமாஜ்வாடி கட்சி 224 இடங்களிலும் (ஆட்சியமைக்க குறைந்தது 202 இடங்கள் தேவை), ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும், பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் மட்டுமே முன்னணியில் உள்ளன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 14 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் சமாஜ்வாடி கட்சி 127 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 129 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 7 இடங்களைப் பிடித்துள்ளது. பாஜக 2 இடங்களை இழந்துள்ளது.

உத்தர்கண்ட்டில் கடும் இழுபறி:

உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் பாஜக 32 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது. சுயேச்சைகளும் சிறு கட்சிகளும் 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க 35 இடங்கள் தேவை.

இதனால் இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மாயாவதி மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் உதவி தேவை. இதனால் இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் பாஜக 3 இடங்களை இழந்துள்ளது. காங்கிரஸ் கூடுதலாக 10 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் 5 இடங்களை இழந்துள்ளது.

பஞ்சாபில் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி:

பஞ்சாபில் ஆளும் அகாலிதளம்-பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 இடங்களில் அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன.

இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க 58 இடங்களே தேவை. அகாலிதளம்-பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.

இந்த மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் பெற்ற இடங்களையே மீண்டும் பெற்றுள்ளது.

காங்கிரஸ் 2 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது.

கோவாவில் பாஜக ஆட்சி:

கோவாவில் காங்கிரஸை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் தான் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் 5 இடங்களில் வென்றுள்ளன.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலத்தில் பாஜக 10 இடங்களை கூடுதலாகப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களை இழந்துள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ்:

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 44 இடங்களில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இதனால் இந்த மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 10 இடங்களிலும் வென்றுள்ளன.

பாஜகவுக்கு முட்டை தான் கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 14 இடங்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 7 இடங்களும் கூடுதலாகக் கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை: