வியாழன், 8 மார்ச், 2012

நடராஜன்: சந்தேகமிருந்தால்அண்ணாநகர் ரமேஷ் போல குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்.

பெங்களூரு வழக்கில் எங்கள் குடும்பமே, "நாங்கள் தான் பொறுப்பு' என, ஒப்புக்கொண்டு விட்டோம். ஹனுமான் போல என் மனைவி சசிகலா நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகமிருந்தால், எங்களை குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்,'' என்று நடராஜன் உருக்கமாக கூறினார்.

தஞ்சையில் விளாரில் புதிய நில அபகரிப்பு புகாரில் சிக்கிய சசிகலா கணவர் நடராஜன் நேற்று மாலை தஞ்சை ஜே.எம்., 2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மாஜிஸ்திரேடிடம் நடராஜன் கூறியதாவது:போலீஸார் தொடர்ந்து என்னை சிறையில் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயகத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை நீங்கள் (மாஜிஸ்திரேட்) அனுமதிக்கக் கூடாது. திருச்சி நீதிமன்றத்தில் எனக்கு போலீஸார் கஸ்டடி கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். என்னை ஒரேடியாக ஓராண்டு சிறையில் அடையுங்கள். ஆனால், ஜனநாயகத்தை பாதிக்க நீங்கள் (மாஜிஸ்திரேட்) துணைபோகாதீர்கள்.திருச்சியில் போலீஸ் கஸ்டடி கோரிய மனு மீதான விசாரணை முடிந்து, இன்று (நேற்று) மாலை 4.30 மணியளவில் இயற்கை உபாதைகளை கழிக்கவோ, தண்ணீர் குடிக்கவோ போலீஸார் என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு, 69 வயது ஆகிறது. என்னை வாட்டுவது என்பதில், போலீஸாரும், அரசும் தெளிவாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து வரும் 21ம் தேதி வரை நடராஜனை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:நான் சிறையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு நன்மையும் வந்துவிடாது. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது மற்றொரு வழக்கு தொடுத்துள்ளனர்.பெங்களூரு வழக்கில், "எங்கள் குடும்பமே, நாங்கள் தான் பொறுப்பு' என, ஒப்புக்கொண்டு விட்டோம். எங்களை பற்றி இனியும் முதல்வருக்கு சந்தேகம் வேண்டாம்; பயப்பட வேண்டாம். தி.மு.க., ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்டது. அதில் வெற்றி பெற்றோம். அதனால் பயப்பட வேண்டாம்.முதல்வருக்கு சந்தேகமிருந்தால், சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும்.அந்த விஷத்தை குடித்துவிட்டு, நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம். பெங்களூரு நீதிமன்ற வழக்கில், என் மனைவி சசிகலா, ஹனுமான் போல, நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: