சனி, 12 நவம்பர், 2011

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன்


சென்னை, நவ. 11: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் பி.எஸ்.ஞானதேசிகன் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கெனவே தலைவராக இருந்த கே.வீ.தங்கபாலுவின் ராஜிநாமாவை ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெள்ளிக்கிழமை அறிவித்தார்.ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, மே 14-ல் தங்கபாலு தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு அவரது ராஜிநாமாவை ஏற்று புதிய தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.ஜி.கே. வாசனின் ஆதரவாளர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 1949 ஜனவரி 20-ல் பிறந்தவர் ஞானதேசிகன். தந்தை சிவகுருநாதன், தாயார் மீனாட்சி அம்மாள். மனைவி திலகவதியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.இவர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ள ஞானதேசிகன், சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பையும், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் ஆதரவாளராக இருந்த ஞானதேசிகன், காங்கிரஸ் சட்டப் பிரிவு மாநிலத் தலைவர், பத்திரிகை தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 1996-ல் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் (த.மா.கா.) இணைந்தார். 2001 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் இவர், பாதுகாப்பு, நிதி, உள்துறை, தொழிலாளர் நலம், ரசாயனம் மற்றும் உரம் ஆகிய துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் ஞானதேசிகன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்."காங்கிரஸ் வலுவாகும்': புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஞானதேசிகன் கூறியது:தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து ஒருமுனைப்படுத்தி வலுவான இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியும், பொதுச் செயலாளர் ராகுல்காந்தியும் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கியுள்ளனர்.கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்பார்ப்பு வீணாகாத வகையில் செயல்படுவேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவேன். தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோல காங்கிரஸ் கட்சியை வலுவான இயக்கமாக மாற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: