புதன், 9 நவம்பர், 2011

நடிகர் ஷாருக்கானிடம் 6 மணி நேரம் விசாரணை பணம் எப்படி வந்தது?

நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிக்கான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.   ஷாருக்கான் அவரது அணிக்கான கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
அணி வீரர்களின் பயிற்சி, பராமரிப்புக்காகவும் பெருந்தொகை செலவு செய்துள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து அமைத்துள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியிலும் கலந்து கொண்டது. இதற்கும் கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளது.இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினார்கள். 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செய்த முதலீடு எவ்வளவு? இதற்கான பணம் எப்படி வந்தது? இதன்மூலம் வந்த வருமானம் எவ்வளவு?

வரிமுறையாக செலுத்தப்பட்டுள்ளதா? சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியதின் மூலம் கிடைத்த வருமானம், செலுத்திய வெளிநாட்டு வரி ஆகியவை குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.

அதற்கு ஷாருக்கான் பதில் அளித்தார். மேலும் கிரிக்கெட் வீரர்களை வாங்கியதற்கான ஒப்பந்த ஆவணங்கள், விளம்பரங்கள், எந்த வகையான பங்குகளை வைத்திருக்கிறார், லாப- நஷ்ட கணக்கு விவரம் ஆகியவற்றுக்கான முழு விவரங்களை 2 வாரங்களுக்குள் அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தர விட்டனர்.

ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சசாங்மனோகர் ஆகியோரிடம் ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.  இப்போது ஷாருக்கானிடம் விசாரணை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: