வெள்ளி, 11 நவம்பர், 2011

தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி மாநிலம் உருவாக்குவதற்கு பதிலாக, தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் உருவாக்கக்கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்கள், ஆந்திராவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து ஆராய மத்திய அரசு, ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன், ஆந்திராவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆந்திராவை பிரிப்பதால், சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என, இந்த கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்தது. இதனால், தெலுங்கானாவை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் சமீபத்தில் தொடர் போராட்டங்களை அறிவித்து, போக்குவரத்தை தடை செய்தனர். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆந்திராவில் சகஜ நிலை பாதிக்கப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே, தனி தெலுங்கானா குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்பதால், ஆந்திர மக்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் ஆந்திர மாநில கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக, தனி மாநிலம் உருவானால், ஸ்திரமற்ற அரசியல் நிலை ஏற்படும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கு பதிலாக தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை உருவாக்கி, அந்த கவுன்சிலின் தலைவருக்கு துணை முதல்வருக்குரிய அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீனிவாசை, இந்த கவுன்சிலின் தலைவராக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: