வெள்ளி, 11 நவம்பர், 2011

அன்று எம்.ஜி.ஆர். சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!

மனம் திறக்கும் ராஜாத்தி அம்மாள்
இரா.சரவணன்
கனிமொழியின் சிறைப் படலத்துக்குப் பிறகு முதன்முறையாக இங்கே மனம் திறக்கிறார் ராஜாத்தி அம்மாள்...
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்ப, கனிமொழி தீவிர அரசியலில் இல்லை. அது எப்போ எம்.பி. ஆச்சு, எப்போ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததுனு ஒப்பிட்டுப் பார்த்தாலே... கனிமொழிக்கு இதில் எள்முனை அளவுகூடச் சம்பந்தம் இல்லைங்கிறது தெரியும். ஆனா, திட்டமிட்டு கனிமொழியை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழுத்துவிட்டுட்டாங்க. கனிமொழியை விசாரிச்ச சி.பி.ஐ. அதிகாரிகளுக்கே எங்கள் தரப்பில் இருக்கும் அடிப்படை நியாயம் புரியும். இருந்தும் 150 நாட்களுக்கும் மேலா கனிமொழி சிறையில் இருக்குது. ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம்னு சி.பி.ஐ. தரப்பே சொன்ன பிறகும், கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கு. கோர்ட்டுக்கு கனிமொழி வந்தப்ப, 'கவலைப்படாதம்மா... உன்னோட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்னிக்கு விடிவு கிடைச்சிடும்’னு ஆறுதல் சொன்னேன். எப்பவும் சிரிக்கிற மாதிரியே மென்மையா சிரிச்சது. ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சது. அந்த சிரிப்பில் இருக்கிற துயரம் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரே ஒரு பெண்ணைப் பெத்தெடுத்து, இப்படி அல்லாடவிட்டுட்டோமேனு என் மனசு கொதிக்குது!'' என்றபடியே கண் கலங்கியவரிடம் சற்று இடைவெளிக்குப் பின் நம் கேள்விகளை வைத்தோம்.
''ஜாமீன் நிராகரிப்புக்குப் பிறகு கனிமொழி என்ன மன நிலையில் இருக்கிறார்?'' ''பெத்த தாயா நான்தான் கனிமொழிக்கு ஆறுதல் சொல்லணும். ஆனா, கனிமொழி என் கையைப் பிடிச்சு எனக்கு ஆறுதல் சொல்லுது. நான் கண் கலங்கியதைப் பார்த்து, 'அழுவுறதால ஏதும் ஆகப் போறது இல்லம்மா... ஜாமீன் கிடைக்காததுல உங்களுக்குத் தாங்க முடியாத வருத்தம்தான். ஆனா, எதையும் தாங்குற வல்லமையை இந்த மாதிரியான பிரச்னைகளே எனக்குக் கொடுத்துச்சு’னு சொன்னது. திகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்ப, அங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்க. எங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்கு. பெட்ஷீட், சாப்பாடு, பழங்கள்னு சிறைக்குள் இருக்கிற அந்தக் குழந்தைகளுக்கும் கனிமொழி நிறைய உதவுது. மறுபடியும் சிறைக்குக் கிளம்பிய கனிமொழி, அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறதுக்காக சாக்லேட் வாங்கிவரச் சொன்னது. ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்கு. ஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்’னு சொல்லிட்டுக் கிளம்பிப் போச்சு. எல்லாத்தையும் கடந்த மனுஷியா என் மக பேசுறதைத் தாங்க முடியலை. இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?''

''கனிமொழியைச் சிக்கவைத்ததிலும், அடுத்தடுத்த சில நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சியின் சில கோபங்களும் இருப்பதாகச் சொல்கிறார்களே?''

''இதில் யாரோட கோபம் இருந்தாலும் சரி... ஒரு சின்னப் பையனோட தாயா கனிமொழியை ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்கணும். மகனைப் பிரிஞ்சு திகார்ல அது படுறபாட்டை ஒரு தாயா என்னால தாங்க முடியலை. கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் வந்ததா சொல்லப்படுற விவகாரத்தில், கனிமொழிக்குச் சம்பந்தம் இல்லைனு அதிகாரிகளுக்கும் தெரியும்; அரசியல் பண்றவங்களுக்கும் தெரியும். கனிமொழியைக் காப்பாத்தச் சொல்லி நாங்க கெஞ்சலை. அனுபவிக்க வேண்டிய அத்தனை சிரமங்களையும் அது அனுபவிச்சிட்டுது. ஒரு விசாரணைக் கைதியோட நியாயமான கோரிக்கைதானே ஜாமீன் கேட்கிறது? அதைத் தடுக்கிற விதமா வழக்குல திடீர்னு இரண்டு பிரிவுகளைப் புதுசாச் சேர்த்து ஏன் கனிமொழியைச் சிக்கவைக்கணும்? அதைத் தாண்டியும் ஜாமீன் கேட்பதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும், அது எப்படிச் சாத்தியம் இல்லாமப்போச்சுனு எங்களுக்குப் புரியலை.
நாங்க சட்டத்தை மதிக்கிறோம். நீதியை நம்புறோம். என் பொண்ணு தவறு பண்ணி இருந்தால், எல்லா விசாரணைகளையும் நடத்தி என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. ஆனா, விசாரணைக் கைதியாவே கனிமொழியைச் சாகடிச்சிடாதீங்க. கனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்க. உங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னா, நீங்க தொடர்ந்து பண்ணுங்க!''

''நீங்களும் கருணாநிதியும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து கனிமொழிக்காக மன்றாடியதாகச் சொன்னார்களே?''

''அவர் (கருணாநிதி) மகளைப் பார்க்கிறதுக்காகத்தான் டெல்லிக்கு வந்தார். அப்போ சோனியா காந்தி அம்மையாரைச் சந்திக்காமத் திரும்புவது அரசியல் நாகரிகமாக இருக்காதுன்னுதான் அந்தச் சந்திப்பு நடந்துச்சு. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குப் போய் வந்ததுக்கு அப்புறம் சோனியா காந்தியை அவர் சந்திக்கலை. அதனால், உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிர, கனிமொழிபத்திப் பேசலை. இன்னிக்கு கனிமொழி எந்த மாதிரியான துயரத்தை அனுபவிக்கிதுனு நாங்க சொல்லாமலே சோனியா காந்தி அம்மையாருக்குத் தெரியும். யார் மேலயும் வருத்தப்படுற நிலையில் நாங்க இல்லை!''

''ஓர் இலக்கியவாதியாக மட்டுமே இருந்த கனிமொழியை அரசியலுக்கு இழுத்து வந்து இப்படி ஆக்கிவிட்டீர்கள் என்று உங்களைக் குற்றம் சாட்டுகிறார்களே?''
''கனிமொழியைக் கையைப் பிடிச்சு யாரும் அரசியலுக்கு இழுத்து வர வேண்டியது இல்லை. அது சின்னக் குழந்தையா இருந்தப்பவே அரசியல்ரீதியான ஆர்வத்தை நிறைய பேர் ஊட்டினாங்க. எம்.ஜி.ஆர். அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மா’னு சொன்னார். வேறு யாரைப் பார்த்தும் எம்.ஜி.ஆர். அப்படிச் சொன்னது இல்லை. அவர் மனசாரச் சொன்ன வார்த்தைகள்தான் இன்னிக்கு நடந்திருக்கு. ஐந்து முறை முதல்வரா இருந்தவரோட மகளை அரசியலுக்கு யாரும் இழுத்து வரணும்கிற அவசியம் இல்லை. கனிமொழி சின்னப் பொண்ணா இருந்தப்ப கோயம்புத்தூருக்கு விமானத்தில் போய்ட்டு இருந்தோம். நாவலர் நெடுஞ்செழியனும் குடும்பத் தோட வந்திருந்தாங்க. அப்போ விமானம் தரை இறங்குறப்ப வேகமாக் குலுங்குச்சு. நான் பயந்துபோய், 'முருகா’னு கத்தினேன். அப்போ கனிமொழி என்ன சொன்னுச்சு தெரியுமா... 'ஏம்மா, முருகானு கத்துற? மு.க-னு கத்தியிருக்க வேண்டியதுதானே. நீ முருகானு கத்தினதைப் பார்த்து, சுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களா’னு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழி, அரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல.

தலைவரைக் கைது பண்ணின நாள்தான் கனிமொழியோட அரசியலை வெளிக்கொண்டுவந்த நாள். சிறை வாசல்ல உட்கார்ந்து அவர் துடிச்ச துடிப்பு யாருக்கும் மறந்திருக்காது. அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் கனிமொழி ஓர் இலக்கியவாதியா மட்டுமே இருக்கிறதை நினைக்கிறப்பதான் கஷ்டமா இருக்கு. பதவிகளுக்கு ஆசைப்படுற சராசரி அரசியல்வாதியா கனிமொழி இல்லை. கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, எத்தனை லட்சம் பேருக்கு அது வாழ்வு ஏற்படுத்திக்கொடுத்துச்சுனு எல்லோருக்குமே தெரியும். ஊனமுற்றவர்களுக்காகவும் திருநங்கைகளுக்காகவும் அது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமா நல வாரியம் போன்ற ஆக்கப்பூர்வ உதவிகளைச் செஞ்சுதுனு எல்லோருக்குமே தெரியும். உதவிகளை மட்டுமே செஞ்சதாலதான், இன்னிக்கு இவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவிக்கிற நிலையில இருக்கு. அரசியலையும் செஞ்சிருந்தா உள்ளே போயிருக்க வேண்டிய அவசியமே உண்டாகி இருக்காது!''

''செய்த தவறுக்குத்தானே கனிமொழி கஷ்டப்படுகிறார் எனச் சிலர் சொல்வதுபற்றி?''
''நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதை யும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள். இதிகாசத்திலேயே இப்படித்தாங்கிறப்ப, நிகழ்காலத்தில் எங்களை நோக்கி வர்ற விமர்சனங்களைச் சட்டைபண்ற நிலையில் நாங்க இல்லை. கனிமொழியை மீட்க எல்லோருமே போராடுறோம். கட்சி, உறவுனு எல்லோருடைய அன்பையும் அக்கறையையும் நினைச்சுப் பார்க்கிறோம். குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாப் பார்க்கிறதும் பேசுறதும் இங்கே எல்லாருக்கும் பழக்கம் ஆயிடிச்சு. பேசுறவங்க என்ன வேணும்னாலும் பேசட்டும்... ஆனா, 200 கோடி ரூபாய்க்கும் கனிமொழிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு நிச்சயம் நீதிமன்றம் ஒரு நாள் சொல்லும். அதுவரைக்கும் எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''
thanks vikatan+chandran NH

கருத்துகள் இல்லை: