வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜெயாவின் கருணா மீதான போரில் collateral damage தமிழக மாணவர்கள்தானா

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு 

சமச்சீர் கல்வித் திட்டம் என்று சொல்லப்பட்டு கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது வெறும் ஒற்றைப் பாடத்திட்டமே. எப்படி புரட்சி, சமூகநீதி போன்ற சொற்கள் எல்லாம் தமிழகத்தில் பொருள் இழந்துபோயுள்ளனவோ அதேபோலத்தான் இந்த சமச்சீர் என்ற சொல்லும். 

அடிப்படையில் நான் ஒற்றைப் பாடத்திட்டம் என்பதை எதிர்க்கிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமக்கென தனியொரு பாடத்திட்டம் வேண்டினால் அதைக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். அதில் சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதையும் விடுத்து மாநில வாரிய (ஸ்டேட் போர்ட்) பட்டயத்துக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இதை மேலும் விரிவாகப் பேசவேண்டும், வேறோர் இடத்தில்.

இந்தப் பதிவின் நோக்கம் ஜெயலலிதாவின் வீம்பைப் பற்றிப் பேசுவது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதே தன் நோக்கம் என்பதாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் என்பது ஒரு பக்கம். வேறு யார்மீதும் எந்தக் கரிசனையும் இல்லாது நடந்துகொள்ளும் அகங்காரமான மனோபாவம் மற்றொரு பக்கம். பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து இரண்டு முழு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் சரியான புத்தகங்கள் போய்ச் சேராமல் இருப்பதற்கு முழுமையான காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதிமீதான போரில் கொல்லேட்டரல் டேமேஜ் தமிழக மாணவர்கள்தானா?

இதனை வெளிப்படையாகச் சொல்லி அவரைக் கண்டிக்க எந்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்கும் துப்பு இல்லை. தலையங்கங்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தெருவில் ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் யாரோ ஒரு கோவிந்து ‘அம்மா, தாயே, ஏதாச்சும் ஒரு சிலபஸை அப்ரூவ் செய்து எங்க பிள்ளைகள் வாழ வழி செய்யுங்கள், தாயே’ என்று பிச்சை எடுக்கிறார். கல்வி என்பது உரிமை. அதற்காகப் பிச்சையா கேட்கவேண்டும்? அந்த உரிமையில் ஜெயலலிதா வீம்புக்காகத் தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கிறார். முக்கியமாக இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடையும் மன உளைச்சல் பற்றி அவர் கடுகளவும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதில் கருணாநிதியின் தவறே இருந்துவிட்டுப் போகட்டும். மாணவர்களைப் பாதிக்காமல் ஒரு முடிவு எடுத்துவிடமுடியாதா என்ன? எதற்காக விடாமல் இந்த கோர்ட், அந்த கோர்ட் என்று இழுத்தடிக்கவேண்டும்? இது என்ன சொந்த சொத்துக் குவிப்பு வழக்கா? அங்கு வாய்தா மேல் வாய்தா வாங்கினால் அதற்காவது நியாயம் கற்பிக்கலாம். ஆனால் இங்கு?

ஜெயலலிதாவின் ஆட்சிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஒன்றுதானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வோம், பிற விஷயங்கள் எல்லாம் பிரமாதமாகச் செய்கிறார் என்று பாராட்டுவது அபத்தம். நாளை அவருக்குப் பிடிக்காத ஒன்று நடைபெறுகிறது என்றால் அப்போது எந்தமாதிரியான ருத்ர தாண்டவம் ஆடுவார் இவர் என்பதை இந்த முதல் கோணலே காட்டிக்கொடுத்துவிட்டது.

கருத்துகள் இல்லை: