வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சீனாவின் அணைக்கட்டால் இந்தியாவுக்கு பாதிப்பு? இல்லையாம் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடில்லி: "பிரம்மபுத்திரா ஆற்றில் நாங்கள் கட்டும் அணையால், இந்தியாவின் நலன் பாதிக்கப்படாது என, சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதிமொழி மீது, இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது' என, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் கூறினார். பிரம்மபுத்ரா ஆற்றில், ஜாங்கு என்ற இடத்தில், புதிய அணையை சீனா கட்டி வருகிறது. நீர் மின் திட்டத்துக்காக கட்டப்படும் இந்த அணையால், இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என, புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, ராஜ்யசபாவில் நேற்று பதில் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகள். ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும். பிரம்மபுத்திரா ஆற்றில், சீனா கட்டி வரும் அணை குறித்து, அந்த நாட்டு அதிகாரிகளிடம், நாம் கவலை தெரிவித்தோம். இதை ஏற்றுக்கொண்ட சீன அரசு, இந்த அணையால், இந்திய நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, உறுதி அளித்துள்ளது. சீனாவின் இந்த உறுதி மீது, நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். அதே நேரத்தில், அணையால் நமக்கு பாதிப்பு எதுவும் வருமா என, ஆய்வு செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

முன்னதாக அமைச்சர் கிருஷ்ணா பேசுகையில், "புதிதாக கட்டப்படும் அணை, நீர் மின் உற்பத்திக்காகவே கட்டப்படுவதாகவும், நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது' என்றார்
இந்தியாவுக்கு அந்த அணையால் பாதிப்பு என்றாலும் கூட ஒண்ணும் பண்ணமுடியாது என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்க சதா நாம வல்லரசாவோம் என்று பாமர ஜனங்களுக்கு ரீல் விட்டு விட்டே முட்டாள்களின் ராஜ்யமாகிவிட்டோம்லே 

கருத்துகள் இல்லை: