சனி, 6 ஆகஸ்ட், 2011

தீக்குளிக்க தயார்: ராமதாஸ் திராவிட கட்சிகளோடு இனி கூட்டில்லை

: திராவிட கட்சிகளோடு, இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்பதை, தீக்குளித்து நிரூபிக்கவும் தயார் என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். விழுப்புரத்தில்,

நேற்று மாலை நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது: பொதுக்குழு கூட்டி, இனி திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணியில்லை என்ற, தீர்மானத்தை நிறைவேற்றினோம். நமது கொள்கையைப் பின்பற்றும் கட்சியோடு, அணிவகுப்போம். திராவிடன் என கூறுவதை விட, தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். திராவிடம் எனக் கூறி நம்மையும், மக்களையும் ஏமாற்றினர், ஏமாந்தோம். அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றனர். அந்தக் கொள்கையை, சுடுகாட்டுக்கு அனுப்பியது தான் மிச்சம்.
"மானாட மயிலாட' பார்க்க, கட்சிக்கு ஒரு "டிவி' துவக்கியுள்ளனர். திராவிட கட்சிகள் ஆட்சியில் சினிமா, அரசியல் காரணமாக சீரழிவுகள் தான் அதிகம். நீங்களும் திராவிட கட்சிகளிடம், கூட்டணி வைத்தீர்களே என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்த, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நான்கு ஆண்டுகளும் எதிர்க்கட்சியாகவே இருந்து, எதிர்த்து கேள்வி கேட்டோம். தி.மு.க.,வினர் கூட பயந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், நாம் கொடுத்த தொல்லையில், கருணாநிதி தலையில் அடித்துக்கொண்டு, தொலைந்து போ என்றதால் வெளியேறினோம்.
தனித்து நிற்க நல்ல முடிவெடுத்துள்ளீர்கள், உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கின்றனர். உறுதியாக இருப்போம் என்று நிரூபிக்க, தீக்குளிக்கனுமா.. எங்கிருந்தாவது குதிக்கனுமா, சொல்லுங்க தயார். இவர்களிடம், இனி எக்காலத்திலும் உறவும் இல்லை; ஒட்டும் இல்லை என்பது உறுதி. தனித்து நிற்கும் முடிவை வரவேற்று, தென்மாவட்டங்களில் இருந்தும், அதிகக் கடிதங்கள் வருகின்றன. மதுவைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், ஓட்டு போய்விடும் எனலாம். போகட்டும் நமக்கு ஓட்டு வேண்டாம். இவ்வாறு, பா.ம.க., ராமதாஸ் பேசினார்.

கருத்துகள் இல்லை: