வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பெண்கள் முகத்திரை அணிய தடை விதிக்கிறது இத்தாலி

பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா, நிகாப் அணிவற்கு தடைவிதிக்கும் சட்டமூலமொன்றுக்கு இத்தாலிய நாடாளுமன்றத்தின் அரசியலமைப்புக்  குழு   அங்கீகாரம் வழங்கியுள்ளது.இச்சட்டமூலம் எதிர்வரும் கூட்டத்தொடர்களின்போது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.  இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு 300 யூரோ (சுமார் 46,600 இலங்கை ரூபா) அபராதம் விதிக்கப்படும். அதேவேளை பெண்களை இத்தகைய ஆடைகளை அணிவதற்கு நிர்ப்பந்திக்கும் 3 ஆம் தரப்பினருக்கு 30,000 யூரோ அபராதமும்   12 மாதங்கள் வரையான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
ஐரோப்பாவில் அண்மைக்காலத்தில் புர்காவுக்கு தடைவிதிக்கும் 3 ஆவது இத்தாலியாகும். பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியன ஏற்கெனவே இதற்குத் தடை விதித்துள்ளன. ஸ்பெய்னில் ஒரு நகரம் இதற்கு தடை விதித்துள்ளது.
இத்தாலியச் சட்டமூலம் மொரோக்கோவில் பிறந்த பெண்ணான ஆளும்  சுதந்திர மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சௌவாத் ஸ்பாய் என்பவரின் அனுசரணையில் இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் சுமார் 3000 பெண்கள் முகத்திரை அணிவதாகவும் அவர்களில் பலர் இதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் ஸ்பாய் கூறியுள்ளார்.
இதேவேளை முகத்திரை அணிவதை  தடைசெய்வது அநீதியானது எனவும் இத்தடையானது தனிமனித சுதந்திரத்தை மீறுவதாகும் எனவும் இத்தாலிய இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: