சனி, 6 ஆகஸ்ட், 2011

சிவகாசி பட்டாசு ஆலையில் கோர விபத்து 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலி

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நேற்று பகலில் நடந்த வெடி விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். ஒரு பெண் மதுரை ஆஸ்பத்திரியில் இறந்தார். 6 பேர் தீ காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி காளையார்குறிச்சியில் கனகபிரபுக்கு சொந்தமான "சுப்ரீம் பைரோ ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள 50 தனி அறைகளில் 200 தொழிலாளர்கள் வேலை செய்தனர். நேற்றுமதியம் 1.45 மணிக்கு தொழிலாளர்கள் அனைவரும் மதிய உணவிற்காக, பட்டாசு தயாரிப்பு அறைகளை விட்டுவெளியே வந்து, ஆலை முன்பகுதியில் உள்ள மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர்.

ஆலையின் நுழைவு வாயில் இடது பகுதியில் வேதிப்பொருட்கள் வைப்பதற்காக அடுத்தடுத்து ஐந்து அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் கரித்தூசி, அலுமினியப்பவுடர், பச்சை உப்பு என தனித்தனியாக வைத்து இருந்தனர். அங்கு தொழிலாளி ஒருவர் பேன்சிரக பட்டாசுக்கு தேவையான வேதிப் பொருட்களை எடைபோட்டு கொண்டிருந்தார். இதனால் அறைகளின் முன்பு வேதிப் பொருட்கள் சிதறி இருந்தது. அப்போது வேதிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்று தவறி விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயானது , மற்ற வேதிப்பொருட்கள் மீது பட, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீயுடன் சிதறியது. விபத்திற்கு பயந்து ஓடிய பெண் தொழிலாளர்கள் அறையின் ஒரு மூலையில் ஒதுங்கியபோது அவர்களை தீ சூழ்ந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலே கருகி இறந்தனர்.

வெடி விபத்தில் 50 அடி தூரத்திற்கு தீ பற்றியதால் அறைக்கு முன் இருந்த மற்ற தொழிலாளர்களும் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். சிவகாசி தீயணைப்பு படை அலுவலர் சண்முக நாதன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்

விபத்தில் உடல் கருகி இறந்த புதுக்கோட்டையை சேர்ந்த முத்தையா மனைவி சண்முகத்தாய்(45) சின்னாத்தேவர் மனைவி அங்கம்மாள், பீகாரை சேர்ந்த மம்தா(26) காடனேரி முத்து மனைவி வீரம்மாள்(50) காடனேரி அய்யாவு மனைவி ஆவுடைத்தாய்(53) ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். குல்லூர் சந்தையைச்சேர்ந்த அம்மாபொண்ணு(40) என்ற பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். காயம் அடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த முருகன் (45) முனியாண்டி(45) சித்தமநாயக்கன்பட்டி பாண்டி(53) குல்லூர் சந்தை பத்மாவதி(50) வீரம்மாள்(50) பீகாரை சேர்ந்த உஷ்மா(20) ஆகியோர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்øகாக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

அமைச்சர் உதயகுமார், கலெக்டர் பாலாஜி, நஜ்மல்கோதா எஸ்.பி., முனுசாமி ஆர்.டி.ஓ., ஆகியோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

போர்மேன் கைது: பட்டாசு வெடி விபத்தில் எம்.புதுப்பட்டி போலீசார் ஆலை உரிமையாளரான சிவகாசியை சேர்ந்த கனகபிரபு, செவலூரை சேர்ந்த மேலாளர் பழனிச்சாமி, விருதுநகரை சேர்ந்த போர்மேன் செந்தில் ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ,போர்மேன் செந்தில் ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

உடல் கருகி 6 பெண்கள் பலி; 6 பேர் கவலைக்கிடம் : கரிக்கட்டையான உடல்கள்

* ஒரே இடத்தில் கருகி இறந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் உடல்களை கரிக்கட்டைகளைபோல் ஆம்புலன்சில் அள்ளி போட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
* விபத்து நடந்த ஒரு அறையில் அலுமினியபவுடர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் தண்ணீர் பீச்சி அணைத்தால் மீண்டும் வெடிக்கும் என்பதால், தானாகவே வலுவிழுக்க (நமத்து போக) வேண்டும் என்பதற்காக இரண்டு மணிநேரமாக தீயணைப்பு படையினருடன் போலீசாரும் எச்சரிக்கையுடன் காத்திருந்தனர்.
* அலுமினிய பவுடர் அறையில் ஒருவர் பிணமாக உள்ளார் என கிராமத்தினர் கூற, அந்த அறையில் சிறு அசைவு
ஏற்பட்டாலும் மீண்டும் வெடிக்கும் என கூறி அறை கதவை திறக்க தீயணைப்பு வீரர்கள் முன் வரவில்லை. நீண்டநேர இடைவெளிக்கு பின் அங்கு பிணம் இல்லைஎன அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
* இறந்த உடல்களை பிரேத பரிசோதனை அறையில் வைத்திருந்த போது, இறந்தது யார் என உறவினர்களால் அடையாளம் காண முடியாமல் தவித்தனர். இதனிடையே ,மைக் மூலம் பேசிய சக்திவேல் டி.எஸ்.பி., ""இறந்தவர்களின் உறவினர்கள் உடனே வந்தால், உடல்களை உடனடி பிரேத பரிசோதனை நடத்தி கொடுக்கப்படும்,'' என கூறி, இறந்தவர்களின் பெயர்களை வாசித்தார். அதன்படி பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
* சட்டசபை கூட்டம் நடப்பதால் விபத்து விபரங்களை முதல்வருக்கு தெரிவிக்க, , சம்பவ இடத்தில் இருந்த எஸ்.ஐ., மொபைலில் பேசியபடி, சென்னை உயர் அதிகாரிகள் விபரம் சேகரித்தனர்.

கருத்துகள் இல்லை: