புதன், 22 ஜூன், 2011

பிரபாகரனின் மனைவி, பிள்ளைகளை ஜனாதிபதி கவனித்து வருகின்றார்- அஸ்வர்எம்.பி!


தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும், பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனித்து வருகின்றார் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விவாதமொன்றின்போது, உரையாற்றிய ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. அல்கைடா தலைவர் ஒசாமா பின்லாடனுடன் சேர்த்து அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதைப் போலல்லாமல், பிரபாகரனின் மனைவியும், பிள்ளைகளையும் ஜனாதிபதி கவனித்து பேணிவருகின்றார் என்றார்.
இதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனிதாபிமானத் தன்மை என அஸ்வர் எம்.பி.கூறினார். இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஜ.நா.அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந் நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட இஸ்ரேலை இலங்கை பின்பற்ற வேண்டுமென ஜ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல கூறினார்.
அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும்போதே ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச். எம்.அஸ்வர் மேற்கண்டவாறு கூறினார். ஏதிர்கட்சியினர் நாட்டுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதாக கூறிய அவர், சணல்-4 அலைவரிசையில் ஒளிபரப்பான ஆவணப்படத்தையும் விமர்சித்தார். அது புலம்பெயர்ந்த தமிழர்களின் வேலை என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: