வெள்ளி, 24 ஜூன், 2011

மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு,ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும்

ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை சேர்த்தே, "பேக்கேஜ்' ஆக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும், 25 லட்சம் பொருட்களை, எந்தெந்த குடும்பத்துக்கு வழங்குவது என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அரிசி வாங்க தகுதியுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், முதல் கட்டமாக, 25 லட்சம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொள்முதல் செய்ய, டெண்டர் விடப்பட்டுள்ளது. இவற்றை வினியோகிக்கும் பணி, செப்டம்பர் 15ம் தேதி துவங்க உள்ளது. இதில், தலா, 25 லட்சம் பொருட்கள் கொள்முதல் செய்வதால், மொத்தம், 75 லட்சம் பொருட்களை, ஒரு வீட்டுக்கு மிக்சி, மற்றொரு வீட்டுக்கு கிரைண்டர், இன்னொரு வீட்டுக்கு மின்விசிறி என அளித்தால், 75 லட்சம் குடும்பங்கள் ஒரே சமயத்தில் பயனடையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, மூன்றையும் சேர்த்தே ஒரே, "பேக்கேஜ்' ஆக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த மூன்று பொருட்களும் மொத்தமாகவே வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், ஒரு வீட்டுக்கு மின்விசிறி கிடைத்து, இன்னொரு வீட்டுக்கு கிரைண்டர் கிடைத்தால் ஏற்படும் அதிருப்தி தவிர்க்கப்படும்.

மேலும், மூன்று பொருட்களுமே மிகவும் தரமாக இருக்கவேண்டும் என்பதில், தமிழக அரசுஉறுதியாக உள்ளது. சந்தையில் உயர்தரத்தில் உள்ள பொருளையே வழங்க வேண்டுமென விரும்புகிறது. இதற்காக, எந்த நிறுவனம் சப்ளை செய்தாலும், அரசு நிர்ணயித்து உள்ள தரத்துடன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 25 லட்சம் மிக்சி கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், கிரைண்டர் கொள்முதல் செய்ய, 500 கோடி ரூபாய்க்கும், மின்விசிறி கொள்முதல் செய்ய, 250 கோடி ரூபாய்க்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர், ஜூலை 11ம் தேதி திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, இப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம், கடந்த 21ம் தேதி நடத்தப்பட்டது. அதில், பொருட்களின் தரம் குறித்து, நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது. அவர்களது சந்தேகங்கள்குறித்தும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு உள்ளன. இவற்றுக்கும் உரிய விளக்கங்களை அரசு அளிக்க உள்ளது.

டெண்டர் முடிந்து, பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவு, ஜூலை 15ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும். எனவே, செப்டம்பர் 15ம் தேதி முதல், பொருட்களின் வினியோகம் துவங்கும். ஒரே நிறுவனத்துக்கு, 25 பொருட்களையும் தயாரிக்கும் உரிமத்தை கொடுக்காமல், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில் என்ன தரத்தில் கிரைண்டர் வழங்கப்படுகிறதோ, அதே தரத்தில் மதுரை அல்லது கன்னியாகுமரியிலும் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. முதல் கட்டமாக, 25 லட்சம் பொருட்களை கொள்முதல் செய்வதால், மொத்தமுள்ள, 1.83 கோடி குடும்ப அட்டைகளில், யாருக்கு முதலில் இவற்றை வழங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி, தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், முதல் கட்டமாக பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ள, "அந்த்யோதயா அன்னா யோஜனா' திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இவற்றை வழங்கலாமா அல்லது அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும் பரவலாக கிடைக்கும் வகையில் பொருட்களை வழங்கலாமா என்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் வெளியிடப்படும்.

வருவாய்த் துறையே பொறுப்பு: மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்தாலும், அவை, ஏற்கனவே இலவச "டிவி' வழங்கப்பட்ட முறைப்படியே மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. அதாவது, வருவாய்த் துறையினர் மூலமே வினியோகம் செய்யப்படும். எனினும், இப்பொருட்கள் உரியவர்களுக்கு உரியமுறையில் வினியோகிக்கப்படுகிறதா என்பதையும், அவற்றின் தரம் மற்றும் அப்பொருட்களை, "சர்வீஸ்' செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், புதியதுறையான சிறப்பு திட்ட அமலாக்கத் துறை கண்காணிக்கும். இதற்காக, மாவட்ட அளவில், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை சார்பாக, புதிதாக ஆட்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு இலவசப்பொருட்கள் கிடைப்பதை, இத்துறை உறுதி செய்யும்.

கருத்துகள் இல்லை: