செவ்வாய், 31 மே, 2011

ஒசாமாவை காட்டிக் கொடுத்தது யார்? : பிரிட்டன் பத்திரிகை தகவல்

லண்டன் : ஒசாமா பின்லாடன் இருப்பிடம் குறித்து, அவரது நெருங்கிய கூட்டாளியும், தலிபான் முக்கியத் தலைவருமான முல்லா அப்துல் கனி பராதர் தான் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார் என, லண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும், "சண்டே மிரர்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:தலிபான் இயக்கத்தின் துணை நிறுவனரும், பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கமான குவெட்டா ஷுராவின் தலைவருமான முல்லா பராதர் தான் ஒசாமா எங்கிருக்கிறார் என்பதை அமெரிக்காவிடம் கூறியவர். அதற்கு பலனாக, தலிபான்களின் தாயகமான ஆப்கானிஸ்தானை விட்டு, அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்ற பராதரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என, அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் குறித்த சில தகவல்கள், ஒசாமாவின் வீட்டில் கிடைத்துள்ளன. ஒசாமா மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் இருவருக்கும் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் பராதர். பராதர் மற்றும் அல்-குவைதாவின் முக்கிய புள்ளிகள் இணைந்து தான் ஒசாமா பற்றிய தகவல்களை அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஒசாமாவின் வேலைக்காரர் அபு அகமது அல்குவைதி என்பவர் பேசிய தொலைபேசி அழைப்பு மூலம் தான் ஒசாமா இருப்பிடத்தை கண்டறிந்தோம் என, இதுவரை அமெரிக்கா கூறிவந்தாலும், பராதர் தான் ஒசாமாவை காட்டிக் கொடுத்துள்ளார். இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: