ஞாயிறு, 14 நவம்பர், 2010

Raja. கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.

இராசா நல்ல உரோசா

தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.இராசா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

1. விலை மதிப்பற்ற 2ஜி அலைக்கற்றையை, ஸ்பெக்ட்ரத்தை, ஏல முறை இல்லாமல் வரிசையில் வந்து, மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை காசு என்று கொடுத்து வாங்கிச் செல்லலாம் என்று சொன்னார். இதனை நிதி அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் எதிர்த்தன. ஆனாலும் இப்படித்தான் செய்வேன் என்று திட்டவட்டமாகச் செய்தார். (இப்போது துறைச் செயலர் ஒருவரும் இதனை ஏற்க மறுத்ததாகச் செய்தி வந்துள்ளது.)

2. அத்துடன், இறுதி தினம் எதுவோ அதற்குச் சில நாள்கள் முன்னதாகவே ஸ்பெக்ட்ரம் விற்பனையை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

3. (1)-ல் சொல்லப்பட்ட காரணத்தால் கணக்கர்கள் கணிப்பில், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் 1,75,000 கோடி ரூபாய். (2)-ல் சொல்லப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, வேண்டுமென்றே சிலருக்குச் சாதகம் செய்ய, பிறருக்குப் பாதகம் செய்ய, முன்கூட்டியே தகவலைச் சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, தேதியையும் முன்தள்ளி வைத்துவிட்டார்.

4. இதன்படி, ஒருசில கம்பெனிகள் சட்டுப்புட்டென்று காசு கொடுத்து ஸ்பெக்ட்ரம் வாங்கிவிட, அதே நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்கள் ஏகப்பட்ட பணத்தைச் செலுத்தி பங்குகளை வாங்கியுள்ளன. இதிலிருந்தே ஊழல் நடந்துள்ளது என்று தெரியவில்லையா?

அடுத்து என் நண்பர்களான சில அனானிமஸ்களும் மற்ற நான்-அனானிமஸ்களும் விளையாட்டாகவும் விளையாடாமலும், நான் ஆ.இராசாவுக்கு ‘ஜிஞ்சா’ அடிப்பது, என் பதிப்பக நிறுவனம் நூலக ஆணைகளைப் பெறுவதற்கே என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இதை ஒரு பொருட்டாக மதித்து பதில் சொல்வதே அபத்தம். என்றாலும், நீங்கள் என் வலைப்பதிவை மிக அதிகமாக மதிப்பீடு செய்கிறீர்கள் என்றே சொல்வேன். என்னவோ இதில் வருவதைப் பார்த்துத்தான் தமிழக அமைச்சர்கள் தங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என்பதாக நீங்கள் நினைப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொருமுறை நான் கருணாநிதியைத் திட்டும்போதும் கிழக்கு பதிப்பக நூலக ஆர்டர் அடிவாங்குகிறது; புகழும்போதும் நூலக ஆணை தூக்கலாக உள்ளது. சபாஷ்! உள்நோக்கம் கற்பிப்பதுதான் என்றால் ஏன் இன்னமும் கற்பனை கலந்து அடிக்கக்கூடாது? ஆ.இராசா எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து, என் சார்பில் நீ பி.ஆர்.ஓ வேலைகளைச் செய் என்று சொல்லியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோமே?

அடுத்து, விஷயத்துக்கு வருவோம்.

ஆ.இராசா ஊழல் செய்யவில்லை என்று நான் அடித்துச் சொல்லவில்லை. ஆனால் அவர் ஊழல் செய்துள்ளார் என்பதற்கு எந்தவிதத்திலும் தெளிவான சாட்சியம் இப்போதைக்கு இல்லை என்றுதான் சொல்கிறேன். நம் மக்கள் எப்படி அபத்தமாக இதைப் புரிந்துகொள்கின்றனர் என்பதற்கு சில மாதிரிகளைப் பார்ப்போம்.

இந்திய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கீட்டாளர் சொல்கிறார். இதையே உண்மையா என்று நாம் கேள்வி கேட்கவேண்டும். அதற்குள்ளாக, அது, ஆ.இராசா 1,75,000 கோடி ரூபாயை அமுக்கிவிட்டார் என்று மாறுகிறது! இரண்டும் ஒன்றா? இந்த ‘மாயப்பணம்’ இருப்பதுபோலவும் அது அரசின் கஜானாவிலிருந்து மந்திரமாக ஆ.இராசாவின் பைக்குள் (அல்லது திமுக பைக்குள்) போனதுபோலவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எழுதுகிறார்: அதில் ஒரு சிறு சதவிகிதத்தை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தினாலும் போதுமே... ஆக, இல்லாத பணம் இருப்பதாக ஆகி, அதை எப்படிச் செலவழிப்பது என்றுகூட மக்கள் யோசித்துவிட்டனர். ஆ.இராசா மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சொத்தும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எனக்கும் கவலையையும் பயத்தையும் தருகிறது. கட்டாயம் இன்வெஸ்டிகேட் செய்யப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்தக் கொள்கை முடிவால் இராசா நிதிரீதியில் எப்படி லாபம் அடைந்துள்ளார் என்பதைக் காண்பிக்காவிட்டால் ஊழல் குற்றச்சாட்டு ருசுவாகாது.

ஆனால் அரசுக்கு வரவேண்டிய பணத்தை இல்லாமல் பண்ணிவிட்டார் என்று இராசாமீது திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டைக் கொண்டுவரலாம். அதை கேபினெட்டும் பிரதமரும் ஏற்றுக்கொண்டால், இராசாவைப் பதவிநீக்கம் செய்யலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றலாம். (கூட்டணிக் கட்சி அழும்பு பிடித்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பது சோனியாவின், மன்மோகனின் பிரச்னை. நமக்குக் கவலை இல்லை.)

ஏன் நான் கணக்கீட்டாளர் கணக்கை ஏற்க மறுப்பேன்? 3ஜி ஏலம் நடந்தது. அப்போது இந்திய அரசுக்குக் கிடைத்த தொகை ரூ. 70,000 கோடி. 3ஜி என்பதைக் கொண்டு பல வித்தைகளைச் செய்யலாம். எனவே இவ்வளவு பணமாவது வந்தது. இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை ஒரு மெகாஹெர்ட்ஸுக்கு இத்தனை என்று பெருக்கி ஒரு கணக்கைக் கொடுப்பது அபத்தம். அதே ஸ்பெக்ட்ரத்தை 2ஜி ஏலம் என்று விட்டிருந்தால், அதிகபட்சம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் கிடைப்பது கடினம். ஏனெனில் ஏற்கெனவே ஏகப்பட்ட கம்பெனிகள் இந்தச் சேவையை அளித்துவந்தன. நிறையப் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கி, ஸ்பெக்டரம் வாங்கி இந்தத் துறைக்குள் நுழைந்தால் ஆரம்பத்திலேயே அந்த நிறுவனம் போண்டி ஆகவேண்டியதுதான்.

தேதியை முன்னுக்குத் தள்ளிப்போட்டதில் ஏதேனும் கிரிமினல் நோக்கம் உள்ளதா, பணம் கைமாறினதா என்பதை சிபிஐதான் தீவிரமாகக் கண்டுபிடிக்கவேண்டும். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியம்தானா என்பது சந்தேகமே. அந்த ஒரு காரணத்தாலேயே இராசா பணம் வாங்கியிருக்கிறார் என்று ஹேஷ்யமாகச் சொல்வது நியாயமற்றது. Where is the evidence?

கடைசியாக, ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு...

இதில் என்ன பிரச்னை? வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது. என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று... என்று ஒரு பெரிய நீண்ட கதை.

யூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற? பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.

நம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், என் பழைய பதிவு ஒன்றைப் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை: