வெள்ளி, 19 நவம்பர், 2010

TNA ஜனாதிபதிக்கு வாழ்த்து!இணைந்து செயற்படவும் தயாரென அறிவிப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கடிதமொன்றை நேற்று (18) அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதையிட்டு கூட்டமைப்பின் பாராட்டுக்களையும் நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக சம்பந்தன் எம்.பீ. தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குஇ கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஏற்கனவே கலந்துரையாடுவ தற்கமைய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார்.
விசேடமாக ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வைப் பற்றி ஆராய்வதற்குத் தயாரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஏற்கனவே உறுதியளித்தபடி பொருத்தமான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுமெனக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சம்பந்தன் எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: