வியாழன், 18 நவம்பர், 2010

அமைச்சரவையில் மாற்றம். ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் 150 வெளிநாட்டு முக்கியஸ்தர்கள்.

அமைச்சரவையில் வரும் திங்கட்கிழமையன்று மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆம் தேதி அமைச்சரவை அமைச்சர்கள் ஏழு பேர் உள்ளிட்ட அமைச்சக பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் பிரதான அமைச்சரவை செயலாளர்கள் இருவர் ஆகியோரினால் புதிய அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை காலம் பிரதி (இணை) அமைச்சர் பதவிகளை வகித்து வந்த சிலருக்கும், எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மூன்று பேருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

தற்போதைய அமைச்சரவை முற்றிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ச மற்றும் சிறிறங்கா ஆகியோருக்கும் அமைச்சரவைகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேநேரம் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளில் 150 வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத் தீவு ஜனாதிபதி, சீன துணைப் பிரதமர், பூட்டான் பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தூதரக அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நோக்கில் தலைவர்கள் நாளை இலங்கைக்கு வருகை தர உள்ளனர்.

கருத்துகள் இல்லை: