சனி, 20 நவம்பர், 2010

நம்பியார், அசோகன், மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது

மனோகர் என்றொரு மனிதர்
அத்தியாயம் 8
மனோகர்
தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆருக்கு அமைந்ததைப்போல ஒரு வில்லன் கூட்டணி வேறு யாருக்கும் அமைந்ததில்லை. நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் என்ற மும்மூர்த்திகள் இல்லாத எம்.ஜி.ஆர். படமேது? இவர்களில் ஆர்.எஸ். மனோகரது கதை கொஞ்சம் மாறுபட்டது.
சினிமா உலகில் வில்லனாக அறிமுகமாகி, அதன் பிறகு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பத்துப் பதினைந்து படங்களுக்குப் பிறகு வில்லன் பாத்திரங்கள் ஏற்று நடித்தவர் ஆர்.எஸ். மனோகர். அவர் சினிமாவில் வில்லன் என்றாலும் கூட அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான கதாபாத்திரங்களுக்கும் புதுப்பரிமாணம் கொடுத்து ஹீரோவாக்கி அந்தப் பாத்திரங்களில் பிரகாசித்தவர் அவர். எனது பத்திரிகையுலக வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் முதல் அவரது மறைவுக்கு சில மாதங்கள் முன்பு வரை அவரைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறேன்.
மனோகரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருடைய அப்பாவுக்கு தபால் இலாகாவில் உத்தியோகம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது அப்பாவுக்கு ஒரு வருட காலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரிக்கு மாற்றலானது. அங்கே இருந்தபோது நிறைய கன்னட, தெலுங்கு நாடகங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பெல்லாரியில் இருந்த ராகவாச்சாரி ஷேக்ஸ்பியரது நாடகங்களை மேடையேற்றுவார். அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும்தான் மனோகருக்கு இன்ஸ்பிரேஷன்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மனோகர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மிருச்சிகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது. எப்படி? ஹீரோவாக நடிக்க வேண்டிய மாணவனுக்கு திடீரென்று அம்மை போட்டுவிட, அவனால் நடிக்கமுடியாது போனது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று சமஸ்கிருத பேராசிரியர் கையைப் பிசைந்து கொண்டு நின்றபோது மனோகர் “சார்! எனக்குக் கூட நடிக்க ஆர்வம் உண்டு. அந்த ரோலில் நானே நடிக்கிறேன்” என்று சொல்லி நடிக்க, எல்லோரும் மனோகரது நடிப்பைப் பாராட்டினார்கள். அதன் பிறகு சுகுண விலாச சபாவில் தோட்டக்காரன் நாடகத்தில் நடித்தபோது, அவரது நடிப்பைப் பார்த்து பாராட்டியவர் நாடகத் தந்தையான பம்மல் சம்மந்த முதலியார்.
படிப்பை முடித்துவிட்டு அப்பாவைப் போலவே தபால் இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார் லட்சுமி நாராயணன். கானல் நீர் என்ற படத்தில், கோட்டு, சூட்டு அணிந்துகொண்டு ஒரு படித்த கதாநாயகன் ரோலில் நடிக்க பர்சனாலிடியான, உண்மையிலேயே பட்டதாரியான ஒரு இளைஞரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களது சாய்ஸ் லட்சுமி நாராயணன். அவரிடம் சினிமாவுக்காக உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றபோது, தான் கல்லூரியில் மிருச்சிகடிகா சமஸ்கிருத நாடகத்தில் ஏற்று நடித்த கேரக்டர் பெயரையே வைத்துக் கொள்ள முடிவு செய்தார். அன்று முதல் லட்சுமி நாராயணன் ” மனோகர்” ஆனார். மத்திய அரசாங்க வேலையில் இருக்கும்போது, சினிமாவில் நடித்தததற்காக பணம் வாங்கிக்கொண்டால் பிரச்னை ஏதாவது வருமோ என்று மனோகர் பயப்பட, தயாரிப்பாளரை அன்பளிப்பாக ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார். அடுத்து தாய் உள்ளம் படத்திலும் ஹீரோ ரோல். அடுத்தடுத்து ஒரு டஜன் படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அடுத்து வந்ததெல்லாம் வில்லன் ரோல்கள்தான்.
“நான் சொந்தமாக நாடக்குழு ஆரம்பிக்கக் காரணம் டி.கே.எஸ். சகோதரர்கள்தான்” என்பார் மனோகர். அவர்களது நாடகங்களைப் பார்க்கும் மக்கள் நேரடியாக கைதட்டி ரசிப்பதைப் பார்த்து, சினிமா பணமும், புகழும் கொடுத்தாலும், நாடகத்தில் நடித்தால்தான் மக்களின் நேரடியான பாராட்டுக் கிடைக்கும் என்பதுதான் மனோகரை 1954ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று ‘நேஷனல் தியேட்டர்’ என்ற தன் நாடகக் குழுவை துவக்கத் தூண்டியது. ஏராளமான வரலாற்று, புராண கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர் நாடகங்கள் போட்டு, பெரும் புகழ் பெற்றாலும், அவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.
2005ல், கல்கி தீபாவளி மலருக்காக சதாபிஷேகம் (80 வயது) முடிந்த மனோகரை பேட்டி கண்டேன். “மனோகரது நாடகம் என்றல் குறிப்பிட்ட நேரத்தில் மணியடித்து, நாடகத்தை ஆரம்பித்துவிடுவார்” என்று பெயர் வாங்கி இருக்கிறீர்களே! அது எப்படி சாத்தியமாயிற்று?” என்று கேட்டபோது, “இதற்கு அடிப்படையான காரணம் நான் படித்த சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளிக்கூடம்தான்” என்றார். “அங்கே எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பக்தி,ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகள் என் வாழ்க்கையில் வளம் சேர்க்கக் காரணமாக இருந்தன. நாடகத்தைப்பொறுத்தவரை நேரம் தவறாமைக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். நாடகத்தை ஆரம்பிப்பதில் மட்டுமில்லாமல், நடிகர், நடிகையர் அரங்கத்துக்கு குறித்த நேரத்துக்கு வருதல், மேக் அப் போட்டுக் கொண்டு தயாராதல் போன்றவற்றில் கூட கால தாமதம் ஆகிவிடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருப்பேன். அது மட்டுமில்லாமல், என் நாடகங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் பல தந்திரக் காட்சிகள் அரங்கேறும். எனவே, ஒரு வினாடி தாமதம் ஏற்பட்டாலும், ஆ! என ஆச்சரியத்தில் வாய் பிளப்பதற்கு பதிலாக ஆடியன்ஸ் ‘ஹா ஹா’ என்று சிரித்துவிடுவார்கள். எனவே, டை, டைமிங் விஷயத்தில் நான் என்றைக்குமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்” என்றார்.
‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே!.  அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள்? அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா?” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும், பல சபாக்களில், நாடகத்துக்குக் கொடுத்திருந்த தேதிகளை கேன்சல் செய்துவிட்டார்கள். “என்னடா! பெரும் முதலீடு செய்து தயாரித்த புராண நாடகம் நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் போல இருக்கிறதே!” என்று மிகவும் கவலைப் பட்டேன். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப்போனேன்” என்றார்.
குழம்பிய மனோகர், காஞ்சீபுரம் சென்று பரமாச்சாரியாரை தரிசித்து, விஷயத்தைச் சொன்னபோது, அவர் ரொம்ப கூலாக, “நீ தப்பா ஒண்ணும் சொல்லிடலையே! கவலைப்படாதே!” என்று சொல்லி ஆசிர்வதித்தார். சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது. ஸ்ரீலங்காவிலிருந்து கொழும்பு நகரில் ஒரே அரங்கத்தில் 21 நாட்கள் இலங்கேஸ்வரன் நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது. நாடகம் பார்த்துவிட்டு, ஸ்ரீலங்கா மக்கள் மனோகரைப் பாராட்டினது மட்டுமில்லாமல், அவருக்கு ‘இலங்கேஸ்வரன்’என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்கள். மனோகரது நாடகங்களிலேயே மிக அதிக தடவைகள் மேடையேறிய பெருமையும் இலங்கேஸ்வரனுக்குத்தான் உண்டு. ஆயிரத்து எண்ணூறு தடவைகளுக்கு மேல் அந்த நாடகத்தைப் மேடையேற்றி இருக்கிறார் மனோகர். ம.பொ.சி., சி.சுப்ரமணியன், ஆர், வெங்கடராமன் போன்றவர்கள் மட்டுமின்றி தந்தை பெரியார் கூட அந்த நாடகத்தைப் பார்த்து, ரசித்து மனோகரைப் பாராட்டி இருக்கிறார்.
இலங்கேஸ்வரனில் சீதை ராவணனின் மகள் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினாற்போல, துரோணர் நாடகத்தில் ஒரு விஷயத்தைப் புகுத்தினார் மனோகர். துரோணர், ஏகலைவனிடம் அவனுடைய கட்டை விரலை குருதட்சிணையாகக் கேட்பதாகக் காட்டாமல், “உனக்கு மிகவும் பிடித்ததை நீ குருதட்சிணையாக எனக்குக் கொடு” என்று கேட்க, ஏகலைவன் தனது வில் வித்தை குருவுக்கு தானாக முன்வந்து தன் கட்டை விரலை காணிக்கையாக்குவதாகக் காட்டினார். அவர், சாணக்கியனாக நடித்த ‘சணக்கிய சபதம் 725 தடவைகள் மேடையேறிய வெற்றி நாடகம். சுக்ராச்சாரியார் முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டுமே சக்கைப் போடு போட்டன.
மனோகர் புத்தபிட்சுவாக நடித்த உப குப்தன் என்ற நாடகம் வெற்றி பெறவில்லை. “இலங்கேஸ்வரனாக பள பளா காஸ்டியூமில், ராமாயணக் கதை சொல்லிவிட்டு, அடுத்து காவி உடையில் புத்த பிட்சுவாக நான் வந்தபோது, மக்கள் அதை ரசிக்கவில்லை” என்றார். ஆனால் அவரது சூரபத்மன், சிசுபாலன், விஸ்வமித்திரர், துரியோதனன், நரகாசூரன், பரசுராமர், துர்வாசர், திருநாவுக்கரசர், மாவீரன் கம்சன், இந்திரஜித், மாலிகாபூர் என்று எல்லா நாடகங்களும் பிரம்மாண்டமான தயாரிப்புகள்; இவற்றில் இடம்பெற்ற தந்திரக் காட்சிகள் மக்களை ஆச்சரியப்படுத்தின. “மேடையில் நொடிப்பொழுதில் நிகழ்ந்தாலும், தந்திரக் காட்சிகள் நாடகம் பார்க்கிற மக்கள் மனதில் ஏற்படுத்தும் ஆச்சரியம் பல காலம் தங்கி இருக்கும்” என்பது அவரது லாஜிக்.
மனோகர் ஒரு பர்ஃபக்ஷனிஸ்ட். மேடையில் எல்லாம் துல்லியமாக நடக்க வேண்டும் என்பதற்காக செம்மையாகத் திட்டமிட்டு, கடுமையாக உழைப்பார். அவரது ஒவ்வொரு நாடகத்துக்கும் முப்பது நாட்கள் ரிகர்சல் நடக்கும். இதில் கடைசி பதினைந்து நாட்களில் தினம் மூன்று முறை மேக் அப், சீன், செட்டுடன் ரிகர்சல் நடக்கும். அரங்கேற்றத்துக்கு முன்பாக இப்படிச் செய்வதால்தான் துளியும் பிசகில்லாமல் அவரால் நாடகத்தை நடத்த முடிந்தது.
கோவையில் ஒரு திறந்த வெளி அரங்கில் மனோகரது காடக முத்தரையன் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, பாதி நாடகத்தில் திடீரென கடும் மழை. மக்கள் கலைந்து ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகு, திரண்டு வந்து நாடகத்தைத் தொடரும்படிக் கேட்டுக்கொள்ள, மனோகரும் நாடகத்தைத் தொடர்ந்தார்.
சினிமா உலகில் பிசியாக இருந்தாலும், நாடகம் நடத்துவதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மனோகர். ஒரு சமயம், சேலத்தில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடகம். அதே நேரம் சென்னையில் எம்.ஜி.ஆர்.பட ஷூட்டிங். மனோகர் எப்படி சமாளித்தார் தெரியுமா? தினமும் காலை ஏழு மணிக்குத் தொடங்கி பகல் 12 மணி வரை சென்னையில் ஷூட்டிங்கில் இருப்பார். அப்புறம் காரில் சேலத்துக்குப் புறப்படுவார். மாலை சேலம் போய்ச் சேர்ந்து, நாடகத்தில் நடித்துவிட்டு, இரவே சேலத்திலிருந்து மறுபடி புறப்பட்டு காலையில் சென்னை!
கல்கி தீபாவளி மலர் பேட்டி முடிந்தவுடன், அவரது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக எழுதும் என் விருப்பத்தை மனோகரிடம் சொன்னேன். “புது வருஷம் பிறக்கட்டும். உட்கார்ந்து பேசலாம். அதற்குள் நானும் பழைய புகைப்படங்கள், நியூஸ் பேப்பர் கட்டிங்குகள், டைரி, எல்லாவற்றையும் ரெடி பண்ணிவிடுகிறேன்” என்றார். புது வருஷம் வந்தபோது நிமோனியா வந்து ஆஸ்பத்திரியில் இருந்தார். அதன் பின் நான் சந்திக்க வாய்ப்பில்லாமேலேயே மறைந்தார். (10 ஜனவரி 2006)
-தொடரும்

கருத்துகள் இல்லை: