வியாழன், 18 நவம்பர், 2010

65 ஆவது அகவையில் ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள்

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 65 ஆவது அகவையில் இன்று வியாழக்கிழமை காலடி எடுத்து வைத்துள்ளார். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தலைநகர் உட்பட நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மத வழிபாடுகள், கண்காட்சிகள், பாற்சோறு அன்னதானம், மருத்துவ முகாம்கள், இரத்தான நிகழ்வுகள், மரநடுகை மட்டுமன்றி அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வைபவங்கள், நினைவுக்கல் திறப்பு விழாக்கள் என இன்னும் பல்வேறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண , பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளின் தலைமையிலேயே இவ்வாறான வைபவங்கள் நடைபெறுகின்றன.
வடக்கு முதல் தெற்கு வரையிலும் இவ்வாறான வைபவங்கள் ஏக காலத்தில் நடைபெற்றுவதுடன் சில வைபவங்களை மாகாண முதலமைச்சர்கள் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். வைபவங்களில் மத தலைவர்கள், பொதுமக்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை முதல் அரசாங்கம் நிகழ்வுகளை நடத்திவருகின்றது.
தேசத்திற்கு நிழல் தரும் மரம் நடுகை எனும் தொனிப்பொருளில் இந்த வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அன்று காலை 10.07க்கு ஆரம்பமாகியதுடன் 10.18 மணிவரை நடைபெற்றது. அந்த 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நாடளாவிய ரீதியில் நாட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், மதவழிப்பாட்டு தலங்கள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்களில் மட்டுமன்றி வீட்டுத்தோட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பிறந்த தினத்தை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திரக் கண்காட்சி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வில்லையின் பிரதி விம்பங்கள், எங்கள் உணவின் உரிமைகள், அழகியற் கலை விதி, எதிர்காலச் சந்ததியினர், இரத்தின தீபம், கலாசார ஆடைகள், தேசிய வைத்தியமும் மூலிகைப் பானமும், அறிவுப் பூங்கா, இலக்கியப் பொய்கை என்று ஒன்பது வலயங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்த நாளான இன்று 18 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் வருகைதரவிருக்கின்றது அக்கப்பலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பார் .ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 4000 ஆயிரம் கிலோ கிராம் கொண்ட பாற்சோறும் தயாரிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: