வெள்ளி, 19 நவம்பர், 2010

சிவாஜி கணேசனின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான எஸ்.ஏ.கண்ணன்

''நாடகம், நடிகர் திலகம், நான்' என்ற தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான எஸ்.ஏ.கண்ணன்




''கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கணுமா?''


''நாடகம், நடிகர் திலகம், நான்' என்ற தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான எஸ்.ஏ.கண்ணன் எழுதியுள்ள புத்தகத்தின் சில பகுதிகளை கடந்த 10.11.10ஜூ. வி. இதழில் 'சிவாஜி இருந்தபோதும்... இறந்தபோதும்...' என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம். அது குறித்து ஏராளமான கடிதங்கள் நமக்கு வந்தன. இரு அதிர்வலைகள் இங்கே...

'பரிகாரம் செய்யும் கோழை அல்ல சிவாஜி!'

''நடிகர் திலகம் சிவாஜி, அவரது மனைவி கமலா அம்மையார், அவரது தம்பி


சண்முகம் ஆகியோரின் கவனிப்பு இல்லாத காலகட்டத்தில், அவர்களைத் தனது மூடநம்பிக்கை வளையத் துக்குள் கொண்டுவர, சுயநலத்தோடு செயல்பட்டுத் தோற்றுப்போன எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமே, இந்தப் பரிதாபகரமான கதை.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கடவுள் பக்தி உள்ளவர் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், அதற்காக, மற்றவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று, அவர்களின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சி, பரிகாரம் என்ற பெயரில் டாலர் மாட்டிக்கொள்ளும் அளவுக்குக் கோழை அல்ல. உண்மையில், மனதளவில் அவர் வீரபாண்டியக் கட்டபொம்மனே! அப்படிப் பட்டவரிடம் தயாரிப்பாளராக இருந்து, பின்னர் ஜோதிடராக மாறிய தர்மராஜ் அவர்களைக் கூட்டிக்கொண்டு போய், 'வெற்றிலை ஜோதிடம் பார்த்து, நவரத்தினக் கற்கள் பதித்த தங்க டாலரைக் கழுத்தில் போட்டுக்கொள்ளாவிட்டால், உடல்நிலை பாதிக்கும்' என்று சொன்னால், அதை அவர் எந்தக் கோணத்தில் எடுத்துக்கொண்டு இருப்பார் என்பது எஸ்.ஏ.கண்ணனுக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யமே!

தன்மேல் அக்கறை உள்ளவர்போல் காட்டிக் கொண்டு, 'பூஜை, புனஸ்காரம், பரிகாரம்' என்ற போர்வையில் உள்நோக்கத்தோடு வந்தவர்களைக்கூட அவமானப்படுத்தித் தலை குனியவைக்காமல், அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுபோல் சிவாஜி பேசி அனுப்பி யதுகூட, எஸ்.ஏ.கண்ணனுடன் இருந்த நட்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே!

சிவாஜியின் தம்பி சண்முகம் 1986-ல் காலமாகி விட்டார். அதற்குப் பிறகு, 15 ஆண்டுகள் கழித்து நடிகர் திலகம் சிவாஜி காலமானார். ஆனால், உண்மையில், சண்முகம் இறப்பதற்குக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, எஸ்.ஏ.கண்ணனுக்கு சிவாஜி வீட்டின் தொடர்பு அறுந்து போய்விட்டது.

எனவே, எஸ்.ஏ.கண்ணன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தம்பி சண்முகத்தை சந்தித்து பரிகாரம் தொடர்பாக 'காட்டுக் கத்தல்' கத்தியது 1982-83 ஆண்டுகளில்தான் நடந்து இருக்க வேண்டும். ஆனால், அதன் பிறகு 20 ஆண்டுகள் வரை சிவாஜி உடல் நலத்துடன் வாழ்ந்தார்.

ஆக, தன் சுயநல வலைக்குள் சிவாஜியை விழவைக்க தான் போட்ட 'பரிகார நாடகம்' தோற்றுப்போனதை எஸ்.ஏ.கண்ணன் அவர்களே தனது வெளிவராத புத்தகம் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததற்கு நன்றி!

சிவாஜி நாடக மன்றம் எஸ்.ஏ.கண்ணன் அவர்களுடன் சேர்ந்து ஆரம்பிக்கப்படவில்லை. அது சிவாஜியால், தன்னுடன் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து, நொடித்த நிலையில் இருந்தவர்களுக்காக தொடங்கப்பட்ட ஒன்று. அதில் வந்து ஒண்டியவர்தான் இவர்!

- கே.வி.பி.பூமிநாதன், தலைவர்
சி.எஸ்.குமார், பொதுச் செயலாளர்
அகில இந்திய சிவாஜி மன்றம்.

''நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.

கண்ணன் போலவே நிறையப் பேர், 'அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்... உடல் ஆரோக்கியமாக இருக்கும்' என்று சொல்லும்போது எல்லாம் நகைச் சுவையாகவே பதில் அளிப்பார்.

'எல்லோரும் உடல்நலத்துக்காகக் கோயில்களிலேயே பரிகாரம் தேடிக் கொண்டால், அப்புறம் டாக்டர் எதற்கு? கோடிக் கோடியாக செலவு செய்து ஆஸ்பத்திரி கட்டுவதெல்லாம் எதற்கு?' என்று கேட்டுவிட்டு, 'மனிதனுக்கு நோயும், உபாதைகளும் அந்தந்த வயதில், வர்ற நேரத்தில் வந்துதான் தீரும். அதை சமாளிச்சு வாழ நாமதான் பழகிக் கணும்' என்பார். அதே நேரத்தில், உடல் நலத்துக்காக மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது, 'உடல்நலம், மன நலம் ரெண்டும் நல்லா இருக்கணும்னா... அண்ணன் மாதிரி (எம்.ஜி.ஆர்.) உடற்பயிற்சியும், எம்.என். (நம்பியார்) மாதிரி உணவுப் பழக்கமும் இருக்கணும்' என்பார். ஆனால் கண்ணன், அந்தப் புத்தகத்தில் நடிகர் திலகம் ஜோசியம், பரிகாரம், இதற்கெல்லாம் விருப்பப்பட்டது போலவும், அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டது போலவும் எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் ஏதாவது விருப்பப்பட்டார் என்றால், அவரது தம்பி சண்முகமும் கமலா அம்மாளும் மற்றும் குடும்பத்தாரும் அதை நிறைவேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள். கண்ணன் கூறியதுபோல் திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யவில்லை என்றால், நடிகர் திலகமே அதை விரும்பவில்லை என்றுதான் பொருள்.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார். பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, 'இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?' என்றார்.

அதற்கு நான், ''அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!'' என்றேன். அதற்கு அவர், 'நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?' என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதில் இருந்தே நடிகர் திலகத்துக்கு ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அறியலாம். வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போது, 'எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை. நீ சந்தோஷத்தை உணர்ந்தால், செய்துகொள்' என்பார். அந்த அளவுக்கு அன்பும் பாசமும் ஒற்றுமையும் அந்தக் குடும்பத்தில் கரை புரண்டோடியது!

- சுந்தர மூர்த்தி
நடிகர் திலகத்தின் கார் டிரைவர் (1982-89)

கருத்துகள் இல்லை: