வியாழன், 5 செப்டம்பர், 2019

சென்னை ரஷியா நேரடி கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்து .. மாஸ்கோவில் பிரதமர் மோடி, புதின் கூட்டாக அறிவிப்பு

சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்து: மாஸ்கோவில் பிரதமர் மோடி, புதின் கூட்டாக அறிவிப்பு   தினத்தந்தி : சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மாஸ்கோவில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கூட்டாக அறிவித்தனர்.
 மாஸ்கோ, ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார
அதை ஏற்று, 2 நாள் பயணமாக மோடி நேற்று ரஷியாவுக்கு சென்றார். விலாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், மோடியை ரஷிய அதிபர் புதின் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்துக்கு படகு மூலம் சென்றனர். அந்த தளத்தை சேர்ந்து பார்வையிட்டனர்.
அங்கு பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பத்தை புதின் எடுத்துரைத்தார். அங்குள்ள ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் மோடி உரையாடினார்.
கப்பல் கட்டும் தளத்தை சுற்றி பார்த்த பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் மோடி பேசுகையில், “இது, இந்தியா-ரஷியா இடையிலான ஒத்துழைப்புக்கு புதிய பரிமாணம் அளிக்கக்கூடிய சிறப்பான தருணம். இந்தியாவின் நம்பகமான நண்பன் ரஷியா. இந்த விசேஷ உறவை வலுப்படுத்த புதின் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை” என்று கூறினார்.

கிழக்கத்திய பொருளாதார அமைப்பு கூட்டத்துக்கு தன்னை அழைத்ததற்காக புதினுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ரஷியா ஆதரித்ததற்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். அந்த முடிவை இந்தியா எடுத்ததற்கான காரணங்களையும், பாகிஸ்தான் செய்து வரும் பொய் பிரசாரத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

புதின் பேசுகையில், மோடிக்கு ரஷியாவின் உயரிய விருதான ‘புனித ஆன்ட்ரூ’ விருது வழங்கியது, ரஷியாவுக்கு கிடைத்த கவுரவம் என்று கூறினார். நாஜிப்படைகளுக்கு எதிரான போரில் ரஷியா வெற்றி பெற்ற 75-வது ஆண்டு வெற்றி தின கொண்டாட்டம், அடுத்த ஆண்டு மே மாதம் மாஸ்கோவில் நடைபெறுவதாகவும், அதில் மோடி பங்கேற்க வேண்டும் என்றும் புதின் அழைப்பு விடுத்தார்.

இருதரப்பு நலன் சார்ந்த விவகாரங்கள், வர்த்தகம், முதலீடு, எண்ணெய், எரிவாயு, சுரங்கத்தொழில், அணுசக்தி, போக்குவரத்து கட்டமைப்பு, வான், கடல்வழி தொடர்பு உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-ரஷியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு, வான், கடல்வழி தொடர்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், வர்த்தகம் ஆகியவை தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

பின்னர், மோடியும், புதினும் பத்திரிகையாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, மோடி கூறியதாவது:-

எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் மற்ற நாடுகள் தலையிடுவதற்கு எதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தியா-ரஷியா உறவு என்பது, தலைநகரங்களுக்கு இடையிலானது மட்டுமல்ல, மக்களுக்கும் இடையிலானது.

சென்னைக்கும், ரஷியாவின் விலாடிவோஸ்டோக்குக் கும் இடையே முழு அளவிலான கடல்வழி பாதை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்காக இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியா பயிற்சி அளிக்கும். இவ்வாறு மோடி கூறினார்.

புதின் கூறுகையில், கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி திட்டமிட்டபடி நடந்து வருவதாக கூறினார்.

விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கிறா

கருத்துகள் இல்லை: