திங்கள், 2 செப்டம்பர், 2019

எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி.. தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்?

தினத்தந்தி : மிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்? எச்.ராஜா,
பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் போட்டியில் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
 சென்னை, தெலுங்கானா கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் போட்டியில் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழக பா.ஜ.க.வின் தலைவராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி நியமிக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவர் பதவியில் அவர் இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்தும், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகி உள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்து தமிழக பா.ஜ.க. தலைவராக யார் வர போகிறார்? என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா மாநில தலைவர் பதவியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த முறை தமிழிசை தலைவராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எச்.ராஜாவும் போட்டியில் இருந்தார். எனவே இந்த முறை தலைவர் பதவியை கைப்பற்றி விட அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

ஏற்கனவே மாநில தலைவர் பதவியை வகித்து விட்டாலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதால் மாநில தலைவர் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முயற்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். இதனால் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் இடையே மாநில தலைவர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி நிலவி வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நரேந்திரன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் மாநில தலைவர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

தற்காலிக தலைவர்

தலைவர் போட்டியில் இருக்கும் அனைவரும் டெல்லி தலைமையில் தங்களுக்கு ஆதரவான மேலிட நிர்வாகிகளை அணுகி வருகிறார்கள். இதில் யார் பதவியை பிடிக்க போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தற்காலிக தலைவர் ஒருவரை நியமிக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: