சனி, 7 செப்டம்பர், 2019

திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?.. என் வி நடராசன் ..பேத்தி

மின்னம்பலம் : திமுக மருத்துவ அணியின் கூட்டம் இன்று (செப்டம்பர் 7) காலை அறிவாலயத்தில் நடந்தது. இதில் மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார். ஆனால் மருத்துவ அணியின் மாநிலச் செயலாளரான டாக்டர் கனிமொழி பங்கேற்கவில்லை. ரத்த தானத்துக்கான செயலி ஒன்றை திமுக தலைவர் ஸ்டாலின், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியிட்ட சில நிமிடங்களில் கூட்டம் முடிந்துவிட்டது.
மருத்துவ அணியின் கூட்டத்தில் மருத்துவ அணிச் செயலாளரான கனிமொழி ஏன் பங்கேற்கவில்லை என்று விசாரித்தபோது, திமுகவின் மருத்துவ அணி ஆரோக்கியமாக இல்லை என்பது தெரிந்தது.
திமுக மருத்துவர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் கூட்டம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடக்கும் என்று மருத்துவ அணி மாநில தலைவர், செயலாளர் பெயரில் முரசொலியில் ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

ஆனால் என்ன கொடுமை என்றால், இந்த அறிவிப்பை வெளியிட்டவர்களில் ஒருவரான மருத்துவர் அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் கனிமொழிக்கு இப்படி ஒரு அறிவிப்பு முரசொலியில் வெளிவரும் வரை தெரியாது. தனக்கே தெரியாமல் தன் பெயரில் அறிவிப்பு வந்திருப்பதைப் பற்றி தனது நண்பர்களிடம் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கனிமொழி.
கனிமொழிக்கும் திமுக தலைமைக்கும் ஒரு பிரச்சினை கடந்த சட்டமன்ற மினிதேர்தலுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதி கனிமொழிக்குதான் என்று தலைமையே உத்தரவாதம் தந்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஓ.எம்.ஜி. குரூப் தலையீட்டால் ஆர்.டி.சேகருக்கு அது ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாள் காலை அறிவாலயம் சென்ற கனிமொழி, தலைவர் அறைக்குள் நுழைந்தார். அங்கே ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சிலர் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஸ்டாலினிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
அந்த கடிதத்தை உடனே படித்தும் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். அதில், 'திமுகவை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் என் தாத்தா என்.வி.நடராஜன். என் அப்பா என்.வி.என்.சோமு கட்சிக்காக எப்படி உழைத்தார் என்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவையான வாரிசு என்றால், தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுவீர்கள். நாங்கள் உங்களுக்கு கிள்ளுக்கீரைதானே... கேட்ட வாரிசுக்கு எல்லாம் சீட் கொடுத்தள்ளீர்கள். எனக்கும் கொடுக்க வேண்டியதுதானே. ஏற்கெனவே நான் இரண்டு முறை தோற்றதுக்கு காரணமே நம்ம கட்சி நிர்வாகிகள் தான். அவங்களை இப்போ மாவட்டச் செயலாளர்களாக்கி பக்கத்தில் வெச்சிருக்கீங்க. அதையெல்லாம் கேட்டால் தப்பாகிடும். நான் சந்தோஷமாக இல்லை. அதுக்கு காரணம் கட்சிதான்!' என்ற ரீதியில் போகிறது அந்தக் கடிதம்,. இதுபற்றி ஏற்கனவே மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. கனிமொழிக்கு பதில் அளிப்பது மாதிரி முரசொலியில் ஒரு கட்டுரை வெளியிட ஸ்டாலின் உத்தரவிட்டு அதன்படியே கட்டுரையும் வெளிவந்தது. அப்போது தலைமையுடன் முரண்பட்ட கனிமொழி அதன் பிறகு அறிவாலயம் பக்கமே செல்லவில்லை.
“கனிமொழியை அப்போது ஒதுக்க ஆரம்பித்தவர்கள் இன்னும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவ அணியின் கூட்டத்துக்கு மாநில செயலாளர் கனிமொழி பெயரில் முரசொலியில் அறிவிப்பு வருகிறது. ஆனால் அது கனிமொழிக்கே தெரியாமல் கொடுக்கப்படுகிறது. இதுபற்றி இந்தக் கூட்டத்தில் கேட்டுவிட வேண்டும் என்று சிலர் இன்று தயாராக இருந்தனர். இப்படி ஒரு மூவ் இருப்பதை அறிந்துகொண்ட மாநில மருத்துவ அணித் தலைவர் பூங்கோதை ரத்ததான செயலியை ஸ்டாலின் லாஞ்ச் செய்தவுடனேயே, ‘இந்தக் கூட்டத்தில் நாம விவாதிக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் தீர்மானமாக போட்டுவிட்டோம். அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கூட்டம் முடிந்தது’ என்று அறிவித்துவிட்டார். மருத்துவர் அணிக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கனிமொழி ஏன் வரவில்லை என்று தலைவரும் விசாரிக்கவில்லை. திமுகவை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான என்.வி.என். சோமுவின் வாரிசுக்கே இந்த நிலையா?” என்று மருத்துவ அணியிலேயே சீனியர் நிர்வாகிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: