சனி, 7 செப்டம்பர், 2019

உதயநிதி - மாசெ.க்கள்! -திமுகவில் தொடரும் பனிப்போர்!

மின்னம்பலம் :
இளைஞரணி மாநிலச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுக மாவட்டச் செயலாளர்களுக்குமான உறவு சுமுகமாக இல்லை என்பது ஆரம்பத்திலிருந்தே திமுகவினர் அனைவருக்கும் தெரிந்த சங்கதியாகவே இருக்கிறது. பொறுப்புக்கு வந்தபிறகு உதயநிதி நடத்திய முதல் கூட்டத்திலேயே, மாவட்டச் செயலாளர்கள் மீதுதான் மாவட்ட அமைப்பாளர்கள் புகார்களை முன் வைத்திருந்தனர்.
இந்நிலையில் உதயநிதிக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை சில திருமண நிகழ்ச்சிகளே எடுத்துக் காட்டுகின்றன.
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மு.ராஜேந்திரன் இல்லத் திருமண வரவேற்பு செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை மந்தைவெளி சுபம் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்வுக்காக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி அழைக்கப்பட்டிருந்தார். மாவட்டச் செயலாளர் என்ற முறையில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார்.
மாலை 7.30க்கு மேல் உதயநிதி ஸ்டாலின் வந்தபோது இளைஞரணியினர் திரளாக வரவேற்பு கொடுத்தனர். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றபிறகு, மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் வந்தார்,. அவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற திருமண நிகழ்வுக்கு ஒரு கட்சித் தலைவர் வரும் போது இன்னொரு கட்சித் தலைவர் வரமாட்டார். அவர் வந்துட்டு போய்விட்டாரா என்று அங்கிருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மாற்றுக் கட்சித் தலைவர் திருமண நிகழ்வுக்கு வருவார். ஏனெனில் பொதுநிகழ்வுகளில் எதிர்க்கட்சி பிரமுகர்களை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதற்காக இப்படி ஒரு அரசியல் ஐதீகம் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த திருமணம் திமுக திருமணம். இந்த திருமண நிகழ்வுக்கு பெரும்பாலும் திமுக தலைவர்கள் வருகை தந்தனர்.அப்படி இருக்கையில் உதயநிதி வந்து விட்டுப் போய் விட்டாரா என்று கேட்டுக் கொண்ட பிறகுதான் மாவட்ட செயலாளர் அன்பழகன் திருமணத்துக்கு வருகிறார்.
அப்படி என்றால் உதயநிதியை நேரில் சந்திக்க அவர் விரும்பவில்லை அல்லது உதயநிதி வரும்போது தான் வந்தால் தனக்கான முக்கியத்துவம் கிடைக்காமல் போகும் என்பது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.
எது எப்படியோ இளைஞரணி மாநில செயலாளருக்கும் திமுகவின் மூத்த மாவட்ட செயலாளர்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை இந்தத் திருமண நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
இப்போதைய திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தபோது ஒவ்வொரு நிகழ்வுகளையும் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு தெரியப்படுத்தி விட்டு தான் செல்வார். அப்போது கலைஞர் தலைவராக இருந்தார். ஆனால் இப்போது ஸ்டாலின் தலைவராக இருக்கிறார் அவரது மகன் உதயநிதி இளைஞரணி செயலாளராக இருக்கிறார்.
திருமணத்தை விடுங்கள் மாவட்டங்களில் நடக்கும் இளைஞரணி நிகழ்வுகளுக்கு கூட சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரியப்படுத்தப் படுவதில்லை. மாவட்டச் செயலாளரின் அனுமதி பெற்றுதான் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போதைய உதயநிதி நிர்வாகத்தில் இளைஞர் அணி நிகழ்ச்சி குறித்து கடைசி நேரத்தில் மாசெ களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது அவ்வளவுதான்.
இதை தலைவர் உடனடியாக கவனித்து இளைஞரணிக்கும் மாவட்ட செயலாளர்களும் இடையிலான இந்த பிணக்கை தீர்க்க வேண்டும் என்கிறார்கள் திமுகவின் நிர்வாகிகள்

கருத்துகள் இல்லை: