சனி, 7 செப்டம்பர், 2019

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை .. பொய் செய்தி வெளியிட்டதால்

மின்னம்பலம் : இன்ஸ்பெக்டர் தொடர்ந்த அவதூறு
வழக்கில் தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் கடந்த 2005ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்தமிழ் முதல்வன். அந்த சமயத்தில் தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் ஒரு செய்தி பிரசுரம் ஆகி இருந்தது. அதில், ‘பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் என்றும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தனக்கு எதிராக அவதூறு பரப்பு விதமாக செய்தி வெளியிட்டதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தினமலர் நாளிதழுக்கு முத்தமிழ் முதல்வன் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இதற்கு தினமலர் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து தினமலர் நாளிதழுக்கு எதிராக முத்தமிழ் முதல்வன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்தது. தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “செய்தி வெளியிடுவது ஊடகங்களின் கடமை” என்று வாதிட்டார்.
இவ்வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை வாசித்த நீதிபதி சுல்தான் ஆர்வின், செய்தி ஆதாரங்களுடன் வெளியிடப்படவில்லை என்றும், யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற செய்திகளில் குற்றம்சாட்டுப்படுபவரின் பெயரை நேரடியாக குறிப்பிடமாட்டார்கள். ஆனால், தினமலர் நாளிதழ் காவல் அதிகாரியின் பெயரையே நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது என்றும் கூறினார்.
இதனையடுத்து, அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாக அப்போதைய இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நஷ்ட ஈடு வழங்கவில்லை எனில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: