புதன், 4 செப்டம்பர், 2019

செங்கல் தரைத்தளம்: செழித்தோங்கிய கீழடி நாகரீகம்!

செங்கல் தரைத்தளம்: செழித்தோங்கிய கீழடி நாகரீகம்!
மின்னம்பலம் : கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் செங்கலால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூன்றுகட்ட அகழாய்வுகளுடன் நிறுத்திக்கொண்ட பின், நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக தமிழக அரசு 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெறும் இந்த அகழாய்வு 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் நடத்தப்பட்டுவருகிறது.

முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்களும் கிடைத்தன. நேற்று முன் தினம்(செப்டம்பர் 2) முருகேசன் என்பவரது நிலத்தில் நிலத்தில் சுடாத மண் குவளை கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று(செப்டம்பர் 3) நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து செங்கலால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என அகழாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வீடுகளின் தரைத்தளம் செங்கலாலேயே அமைக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இது தமிழர்களின் சொழித்தோங்கிய நாகரீகத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை: