சனி, 7 செப்டம்பர், 2019

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிடம் இந்துமுன்னணி அடிதடி வசூல் வேட்டை .. தாக்குதல்கள்

மின்னம்பலம் : திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆம் தேதி சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சிலையை எடுத்துச் சென்ற இந்து முன்னணி அமைப்பினர் சிலர் அங்கிருந்த கடைக் காரர்களிடம் நன்கொடை வசூலித்திருக்கின்றனர். அங்கிருந்த தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்று நன்கொடை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி, நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதில் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் உட்பட ஊழியர்கள் காயமடைந்திருக்கின்றனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு பகுதி போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகத் தொழில் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் கே. பாலகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”அங்கேரிபாளையம் ரோடு, சக்தி தியேட்டர் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்து முன்னணி அமைப்பினர், அங்கு அருகிலிருந்த தனியார் பின்னலாடை நிறுவனம் நன்கொடை தரவில்லை என்று கூறி நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களையெல்லாம் அடித்து, உடைத்து, நாசமாக்கி, தடுக்க வந்த தொழிலாளர்களையும், பெண்களையும் ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பின் இந்த தீவிரவாத வன்முறை நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் மத நம்பிக்கையுடையோர், கடவுள் வழிபாட்டு நடவடிக்கைகளில் அமைதியுடன், மதநல்லிணக்க உணர்வுகளுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக பாரம்பரியம். ஆனால் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாகச் செல்கிறோம் என்று வேண்டுமென்று திட்டமிட்டு, மதக் கலவரத்தையும், பொதுமக்கள் சொத்தையும் சூறையாடுகிற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழக அரசும், காவல்துறையும் எந்த அசம்பாவித நடவடிக்கையும் ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழகக் காவல்துறைக்கும், அரசுக்கும் வலியுறுத்தியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை: