சனி, 7 செப்டம்பர், 2019

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: தலைமை நீதிபதி ராஜினாமா?

மின்னம்பலம் : இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் குழு பரிந்துரைத்தது. மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது.

75 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவரை, 3 நீதிபதிகள் கொண்ட இந்தியாவின் மிகச்சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமணி கொலிஜியம் குழுவிற்கு கடிதம் எழுதினார். ஆனால், இந்தக் கோரிக்கையை கொலிஜியம் குழு செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமணி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யும் கொலிஜியம் குழுவின் பரிந்துரையை எதிர்த்து, அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் கடிதம்
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், “சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயாவிற்கு இடமாற்றம் செய்யும் முடிவினை கொலிஜியம் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: