வெள்ளி, 18 ஜனவரி, 2019

உணவைப் பார்த்ததும் கூச்சலிட்டு ஓடி வந்தன குரங்குகள்!’ – கண்கலங்கிய இளைஞர்கள்

குரங்குகளுக்கு உணவளிக்கும் இளைஞர்கள்vikatan.com - துரை.வேம்பையன்: 
கரூர் அருகே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் சமைத்து மீதமான உணவுப் பொருள்கள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை குரங்குகளுக்குக் கொடுத்து நெகிழவைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.
உணவு சாப்பிடும் குரங்குகள்
கரூர் மாவட்டத்தின் தென் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று, கடவூர் கிராமம். நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இக்கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கடவூரின் தென்கிழக்குப் பகுதியில் பொன்னணியாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில், ஏராளமான குரங்குகளும் தேவாங்குகளும் வசித்துவருகின்றன. கடவூர் பகுதியே கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் கடும் வறட்சிப் பகுதியாக உள்ளதால், அங்கு வசிக்கும் குரங்குகள், தேவாங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவு கிடைக்காமல் அல்லாடி வந்தன. அந்த அணைக்குப் போவோர் யாராவது பழங்களையோ, தின்பண்டங்களையோ அவைகளுக்கு உணவாகத் தந்தால்தான் உண்டு என்கிற நிலைமை.

ஆனால், பொன்னணியாறு அணையும் பல வருடங்களாகத் தண்ணீரின்றிக் காய்ந்துகிடப்பதால், இந்த அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதில்லை.

குரங்குகளுக்கு உணவளிக்கும் இளைஞர்கள்..
இதனால், இந்த உயிரினங்கள் உணவுக்கு மட்டுமல்ல, குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில்தான், அந்தப் பகுதி இளைஞர்கள், இந்த உயிரினங்களுக்கு உணவளித்து நெகிழவைத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வீடுகளில் சமைக்கப்பட்ட பொங்கல்,  சாமி கும்பிட வாங்கிய தேங்காய், பழங்கள் உள்ளிட்ட மீதமான உணவுப் பொருள்களை அப்பகுதி இளைஞர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள குக்கிராமங்களுக்குச் சென்று எல்லா வீடுகளிலும் சேகரித்து, அவற்றை வாகனங்கள்மூலம் பொன்னணியாறு அணைப்பகுதிக்கு எடுத்துச்சென்று, அப்பகுதியில் இருந்த குரங்குகளுக்கும், தேவாங்குகளுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். இதனால், பலநாள்கள் உணவின்றித் தவித்த குரங்குகள்,  கூச்சலிட்டவாறு மலையை விட்டு இறங்கி வந்து உணவை சுவைத்தது, பார்ப்போரை கண்கலங்கவைத்தது. அந்த இளைஞர்களைப் பார்த்து பயம் ஏதும் கொள்ளாமல் நெருங்கி வந்து, அவர்கள் வழங்கிய உணவுகளை வாங்கி உண்டது.
குரங்குகளுக்கு உணவளிக்கும் இளைஞர்கள்...
இதுபற்றி, கடவூர் பகுதி இளைஞர்களில் ஒருவரான பாலாவிடம் பேசினோம்.  “கடவூர் மற்றும் கடவூர் மலைப்பகுதிகள் வறட்சியாக உள்ளது. பல வருடங்களாக இங்கே சரியான மழை இல்லை. பல ஊர் கிராம மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். வெள்ளாமை பண்ண வழியில்லாமல், தங்கள் நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்துள்ளார்கள். மக்களுக்கே இந்தக் கதி என்றால், இயற்கையை மட்டுமே நம்பி இருக்கும் குரங்குகளும், தேவாங்குகளும் உணவு, தண்ணீருக்காக அல்லல்பட்டன. தேவாங்குகள் உலக அளவில் அழிந்துவரும் உயிரினப் பட்டியலில் உள்ளது. ஆனா, எங்க பகுதி மலையில் அவை கணிசமாக வாழ்ந்துவருகின்றன. ஆனா, அவை உணவின்றி அழியும் சூழல் உள்ளது.

குரங்குகளுக்கு உணவளிக்கும் இளைஞர்கள்....
இதனால், அவைகளுக்கு உணவளிக்க முடிவு பண்ணினோம். எங்க பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பல கிராமங்களில் பொங்கலின்போது செய்த பொங்கல், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருள்களைச் சேகரித்து, அவற்றை வாகனம்மூலம் எடுத்துப் போய் கடவூர் மலைப்பகுதிகளில் வைத்தோம். தண்ணீரும் எடுத்துப் போய் வைத்தோம். குரங்குகள் அதைப் பார்த்ததும் பாய்ந்து வந்து சாப்பிட்டன. தேவாங்குகள் இரவு நேரங்களில்தான் உணவு உட்கொள்ளும் என்பதால், அவற்றுக்காகத் தனியாக உணவுப் பொருள்களை வைத்துவிட்டுவந்தோம். எங்க பகுதி இளைஞர்கள், இரண்டு வாரத்திற்கு ஒருதடவை போய், மலைப்பகுதியில் வசிக்கும் உயிரினங்களுக்கு உணவு வழங்கிவிட்டு வர முடிவுசெய்திருக்கிறார்கள்” என்றார் மகிழ்ச்சியாக.
vikatan.com

கருத்துகள் இல்லை: