திங்கள், 14 ஜனவரி, 2019

பன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா?

vikatan : ஓ.பி.எஸ்ஸிடம் 15,000 கோடி பணம், 15,000 ஏக்கர் சொத்து பறிமுதல் இதெல்லாம் 2016-ல் வந்த செய்திகள்.
அந்த ஆவணங்கள் கோடநாட்டில் இருந்ததா?
இதோ விகடனின் பதிவிலிருந்து......
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதா பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அதற்காகவே ஐவர் அணி என்ற ஒன்றை ஆரம்பித்தார்ர. ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் அடங்கிய அந்த அணியில் ஓ.பி.எஸ் தவிர்த்த மற்ற நால்வருக்கும் முக்கியமான வேலையே ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிப்பதுதான். ஓ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிக்கும் மற்ற நால்வரையும் சேர்த்துக் கண்காணிக்க முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர் தலைமையில் ஒரு ரகசிய ‘டீம்’ அமைத்தார். அந்த ‘டீம்’ ஐவரின் செயல்பாடுகள், சொத்துவிபரங்களைப் புட்டுப்புட்டு வைத்ததுடன், ‘ஐவரும் வேறு வேறல்ல... அனைவரும் ஒன்றே!’ என்று சொன்னது. அது ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்தது; அலெக்சாண்டர் ‘டீம்’ கொடுத்த ஐவர் அணியின் சொத்துப்பட்டியல் சசிகலாவை ஆத்திரப்பட வைத்தது.

இதையடுத்துத்தான் ஐவர் அணியை கஸ்டடியில் எடுத்த போயஸ் கார்டன் ‘டீம்’ விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டிய சொத்துகளை முடிந்தவரையில் பறித்தது. அப்படிப் பறிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு குத்துமதிப்பாக 30 ஆயிரம் கோடி. ஆனால், போயஸ் கார்டனின் இந்தக் கறாரை எல்லாம் கடந்து ஐவர் அணி பதுக்கிய சொத்துகள் அதையும் தாண்டி, பல கோடி என்றனர் விபரமறிந்தவர்கள். அதில் ஓ.பி.எஸ்ஸின் சொத்துமதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று மத்திய அரசுக்கும் தகவல்போனது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை வேட்டையாடிய ஜெ.!
பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அவருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
எல்லப்பட்டி முருகன், பன்னீர்செல்வம்
ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமி கைது செய்யப்பட்டார்; அவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டார். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ண மூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு டெண்டருக்கும் சில நூறு லட்சம் கைமாற்றிவிடப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனைபடிதான் கட்சி பதவியிலிருந்து, டெண்டர் வரை எல்லாமே முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் அனைவரும் இரு அமைச்சர்களின் ஆலோசனையின்படிதான் செயல்பட்டார்கள்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டராகவும், ஓ.பி.எஸ்ஸுக்கு ‘ஆல் இன் ஆல்’ என்று இருந்து வந்த முருகன் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் தலைமறைவானார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார். இதற்காக 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது.
ஓ.பி.எஸ்ஸைத் துரத்தியடித்த ஜெ.! அழைக்கச் சொன்ன நடராசன்!
ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஐவர் அணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து, அவர்களிடம் இருந்த சொத்துகளைப் பறித்துக்கொண்டது
ஜெயலலிதா, பன்னீர்செல்வம்
போயஸ் கார்டன். அதன்பிறகு, 2016 மார்ச் 17-ம் தேதி போயஸ் கார்டனுக்கு வரச்சொல்லி ஓ.பி.எஸ்ஸூக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. கோவையில் இருந்தவர் அலறி அடித்துக்கொண்டு, இரவு 11.50 மணி ஃபிளைட்டைப் பிடித்து சென்னை வந்தார். காலையில் 10.20 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். இவர்கள் வந்த தகவல் உள்ளே சொல்லப்பட்டது. ஆனால், உள்ளே இருந்து உடனே அழைப்பு வரவில்லை. அந்த நேரத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். அவர்கள் யாரும் அப்போது ஓ.பி.எஸ்ஸிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. அவர்களை முதலில் சந்தித்த ஜெயலலிதா, அதன்பிறகு ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதனை உள்ளே அழைத்தார். ஒரு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல், தலையைத் தொங்கப் போட்டு இருவரும் நின்றனர். ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த ஜெயலலிதா, "எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இந்தளவுக்கு நீங்கள் செயல்படுவீங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கலை. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் கிடையாது. என் முன்னே நிற்காமல் போய்விடுங்கள்" என்று சொல்லித் துரத்தியடித்தார்.
இந்தத் தகவல் அனைத்தும் சசிகலா மூலம் உடனே நடராசனுக்குப் போனது. அனைத்து விபரங்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட நடராசன், “சசி, அந்த அம்மாவிடம் பேசி சமாதானப்படுத்து. பன்னீரையும், நத்தத்தையும் அப்படியே அனுப்ப வேண்டாம். அவர்களுக்குத் தொகுதி மாற்றி சீட்டைக் கொடுத்து போட்டியிடச் சொல். அவர்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் செலவை இவர்களை வைத்தே செய்யச் சொல்” என்று யோசனை சொன்னார். இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப்போனது. அதையடுத்து மீண்டும் மாலை 5.30 மணிக்கு கார்டனுக்கு ஓ.பி.எஸ் வரவழைக்கப்பட்டார். ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. சில பேப்பர்களில் கையெழுத்துகள் வாங்கப்பட்டன. அதன்பிறகு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட்டுக் கரையேறினார். நத்தம் விஸ்வநாதன் ஆத்தூரில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் தோற்றுப்போனார்.
ஓ.பி.எஸ் அபகரித்த 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!
மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுகா, அகமலை கிராமத்தில் உள்ள ‘டிரை லாண்டு எஸ்டேட்’க்கு 27 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் கடைசியில் காசிம் பாஷா என்பவர் வசம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு அவருடைய மகன் எம்.சி.எஸ்.பாஷாவுக்கு நிலம் சொந்தமாகிறது. ஆனால், அது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லி 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்திக் கொள்கிறது. மீதி உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 2002-ம் ஆண்டு முதல் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து பணப் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். அதை மீட்க எம்.சி.எஸ்.பாஷாவின் இரண்டாம் தலைமுறை வாரிசுகள் முயற்சி செய்தபோது, ஓ.பி.எஸ்ஸின் தம்பி ராஜாவால் அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டது. அவர்களும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், நிலத்தை மீட்க முடியவில்லை. தற்போது அ.தி.மு.க சசிகலா அணி-பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்து இருப்பதால் இந்த விவகாரத்தை தற்போது தலைமைச் செயலகத்துக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் வனத்துறை எடுத்துக்கொண்ட 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய பன்னீர் செல்வம் கோப்புகளை நகர்த்திக்கொண்டிருந்தது தனிக்கதை!
பன்னீர்செல்வத்தின் குடும்பம்
வெளியில் வந்த விவகாரங்கள் கொஞ்சம்... இன்னும் வெளியில் வராத வில்லங்கங்கள் பன்னீர்செல்வம் அடைந்த பதவிகள், பெற்ற அதிகாரங்கள், சேர்த்த சொத்துகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கின்றன. வெளியில் வந்த விவகாரங்களையும் மறைந்துகிடக்கும் வில்லங்கங்களையும் முழுதாகப் புரிந்துகொண்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா என்ற கேள்விக்கான பதிலையும் தெரிந்துகொள்வார்கள்.
https://www-vikatan-com.cdn.ampproject.org/…/84964-panneers…

கருத்துகள் இல்லை: