ஞாயிறு, 13 ஜனவரி, 2019

உ.பி.யில் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு; கூட்டணியில் இடமில்லாததால் முடிவு

THE HINDU TAMIL : சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோவில் நேற்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும், இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காத போதிலும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பது என அகிலேஷும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்புடனே உள்ளனர். இருகட்சிகளுமே ஊழல் கட்சிகள். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அவர்களது வாக்குகள் எதுவும் எங்கள் அணிக்கு வரப்போவதில்லை. எனவே தான் காங்கிரஸை நாங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை’’ எனக் கூறினார்.
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் இந்த முடிவு காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உடனடியாக லக்னோ சென்றார். அம்மாநிலக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜகவுக்கு எதிராக அணைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இதற்காக அனைத்துக் கட்சிகளையும் தொடர்பு கொண்டு வந்தோம். ஆனால் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டனர். எங்களுக்கு கதவு அடைக்கப்பட்ட பின்பு வேறு வழியில்லை. தனித்து போட்டியிடுவது தான் ஒரே வாய்ப்பு. எனவே உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம். பாஜகவை தனியாகவே நாங்கள் வீழ்த்துவோம்’’ எனக் கூறினார். பேட்டியின்போது, உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை: