ஞாயிறு, 13 ஜனவரி, 2019

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி.சீட் ?,

திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமகதினமலர் ; சென்னை: லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 12 தொகுதிகளை ஒதுக்கவும் ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' தரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பா.ம.க., - தே.மு.தி.க.,வை வளைக்க தீவிரம் காட்டி வரும் அ.தி.மு.க., தரப்பு அந்தக் கட்சிகளுக்கு 6+4 என்ற ரீதியில் 10 தொகுதிகளை தர முன்வந்துள்ளது. இதுதொடர்பான திரைமறைவு பேச்சுக்கள் மும்முரமாக நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படலாம். தமிழகத்தில், ஏப்ரல் அல்லது, மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தேர்தலை சந்திக்க, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள், கூட்டணி பேச்சை துவக்கி விட்டன. 'தமிழகத்தில், கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



ஆனால், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில், காங்., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, கூட்டணிக்குள் நுழைய காத்திருக்கின்றன. இந்த கட்சிகளுடன், விரைவில், பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 12 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதில், புதுச்சேரியும் அடங்கும். தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து, கூடுதல் தொகுதிகளை பெற, காங்., தலைவர்
ராகுல் விரும்பவில்லை. பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்மொழிந்துள்ள, முதல் கட்சி என்பதே, அதற்கு காரணம். அத்துடன், 'மாஜி' பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தரவும், தி.மு.க., சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க., அணியை பொறுத்தவரையில், 'தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதேநேரத்தில், பா.ம.க., - தே.மு.தி.க., - மக்கள் நீதி மையம் - த.மா.கா., போன்ற கட்சிகள், எந்தகூட்டணியில் இடம்பெறும் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்ததை, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வரவேற்றுள்ளார். பொங்கல் பரிசு உள்ளிட்ட, தமிழக அரசின் திட்டங்களையும், ராமதாஸ் பாராட்டி வருவதால், அ.தி.மு.க.,வுடன், பா.ம.க., நெருக்கம் காட்டி வருகிறது. முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுடன் தான், 'தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவித்துள்ளார்.


அதேபோல், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் செல்வராஜ் அளித்த பேட்டியில், 'தமிழகத்தில், தாமரை என்ற செடியே இல்லை; பின், எப்படி மலரும்' என, கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, பா.ஜ.,வை தவிர்த்து விட்டு, அ.தி.மு.க., தலைமையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட, 11 கட்சிகளின் கூட்டணி அமைக்க, திரைமறைவு பேச்சு துவக்கப்பட்டுள்ளது. அதில், பா.ம.க.,வுக்கு, ஆறு தொகுதிகளும், தே.மு.தி.க.,வுக்கு, நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்படலாம். மற்ற கட்சிகளுக்கு, ஓரிரு தொகுதிகள் ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க., விரும்புகிறது.

பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., தவிர்ப்பது ஏன் :

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., மேலிடம் காய் நகர்த்தி வந்தது. அதனால், முதல்வர் பழனிசாமி அரசுக்கு, சில விஷயங்களில் சலுகை காட்டியது. அதேநேரத்தில் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரி சோதனை மற்றும் சி.பி.ஐ., 'ரெய்டு' நடத்தி நெருக்கடியும்< கொடுத்தது. அதனால் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் மனநிலைக்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தை அ.தி.மு.க., மாற்றியது. இனி கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் மத்திய அரசுக்கு பயப்படாமல் உறுதியான முடிவை எடுக்கவும் தயாராகி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வீசிய 'கஜா' புயல் நிவாரண பணிகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கியது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்க்காதது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மீது அ.தி.மு.க., அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையில் தமிழக உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தால் 2004 லோக்சபா தேர்தலை போல அந்த கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது' என, கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால் கொங்கு மண்டலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே 'தேர்தலுக்கு பின் பா.ஜ.,வை ஆதரிக்கிறோம் தேர்தலுக்கு முன் உங்களுடன் கூட்டணி வைக்க முடியாது' என டில்லியில், மத்திய அமைச்சர் ஒருவரை அ.தி.மு.க., அமைச்சர்கள் இருவர் சந்தித்து, வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். பா.ஜ.,வுடன் கூட்டணி சேராமல் போட்டியிடுவதன் வாயிலாக 5 சதவீத சிறுபான்மை சமுதாய ஓட்டுக்கள் தி.மு.க., பக்கம் செல்வதை தவிர்க்கலாம். தி.மு.க., - காங்., கூட்டணிக்கு, 40க்கு 40 கிடைக்காமல் தடுக்கலாம்.மத்திய அரசின் எதிர்ப்பு அலையில் சிக்கி அ.தி.மு.க., 'வாஷ் அவுட்' ஆகாமல் பார்த்து கொள்ளலாம் என அ.தி.மு.க., மேலிடம் நம்புவதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: