வெள்ளி, 18 ஜனவரி, 2019

பாஜக 125 ( MP க்களை ) ஐத் தாண்டாது !-மம்தா

மின்னம்பலம் :கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாஜக 125 ஐத் தாண்டாது !-மம்தாகொல்கத்தாவில் இன்று (ஜனவரி 18) அகில இந்திய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்கத்தா செல்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் குறித்து திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வரும், பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ஜனவரி 18 அன்று நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா பொதுக்கூட்டம் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கும் என்று கூறினார். தேர்தலில் பிராந்திய கட்சிகளே வெற்றியைத் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நேற்று (ஜனவரி 17) மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவுக்கு சாவு மணி அடிக்கும். நிச்சயமாக மக்களவைத் தேர்தலில் பாஜக 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகள், அதாவது பிராந்தியக் கட்சிகளே வெற்றியைத் தீர்மானிப்பார்கள். பாஜக பெறும் தொகுதிகளைவிட மாநில கட்சிகள் மிக அதிகமான தொகுதிகளைப் பெறுவார்கள்” என்று கூறினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சி தலைவர் பாபுலால் மராண்டி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ராஷ்டிரிய லோக் தள தலைவர் அஜித் சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ், பட்டிடார் இடஒதுக்கீட்டு போராட்டத் தலைவர் ஹார்திக் படேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இறுதி நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரான சதிஷ் சந்திர மிஸ்ராவும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று அக்கட்சித் தலைவரான மாயாவதி உறுதி செய்தார்.
பிஜு ஜனதா தளம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மூன்று மாநில தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளதால் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்ற மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். தற்போது மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 34 தொகுதிகள் திருணமூல் காங்கிரஸ் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: