வியாழன், 4 அக்டோபர், 2018

பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !

வினவு :யமஹா தொழிலாளர்களின் போராட்டம் 14-வது நாளை எட்டியுள்ளது.  ஆனால் இன்னமும் ஆலை நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை.
கடந்த 21.09.18 முதல் ஒரகடம் சிப்காட் வளாகத்தில் யமஹா ஆலையில் தொழிலாளர் போராட்டமானது நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கம் வைத்த காரணத்துக்காக தொழிலாளிகள் இருவர் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம் இந்த சட்டவிரோத வேலைநீக்கத்தைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்ட்த்தைத் தொடங்கினர். இவ்வாறு யமஹா ஆலையில் மட்டும் நடந்து கொண்டிருந்த போராட்டத்தை நீதிமன்றம் சென்று மொத்த சிப்காட்டில் பணியாற்றும் தொழிலாளிகளின் போராட்டமாக மாற்றியுள்ளது யமஹா நிர்வாகம். வினவு தளத்திலும் இப்போராட்டம் குறித்து ஒரு விரிவான பதிவும், மூன்று வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தொழிலாளிகளின் கோரிக்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக கடந்த 28.09.2018 முதல் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம் என சி.ஐ.டி.யூ., ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்து செல்கின்றனர். மேலும் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளன்று காஞ்சிபுரம் பகுதியில் யமஹா தொழிலாளிகள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியிருந்தனர். அன்று தொழிலாளர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து மாலையில் விடுவித்தது போலீசு.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக நேற்று (03.10.2018) பேச்சுவார்த்தைக்கு வருவதாக யமஹா நிர்வாகம் கூறியிருந்தது, அதன்படி தொழிற்சங்கம் சார்பில் எட்டு பேரும், நிர்வாகத்தின் சார்பில் ஒரு அதிகாரியும் என DCL அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

கருத்துகள் இல்லை: