சனி, 6 அக்டோபர், 2018

ஆளுநர் பன்வாரிலால் :துணை வேந்தர்கள்: கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்!

துணை வேந்தர்கள்: கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்!மின்னம்பலம் :துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக தம்மா சூர்ய நாராயண சாஸ்திரியையும், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவையும் நியமித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவருக்கு சட்ட பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி கொடுப்பதா என்றும், துணை வேந்தர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த யாருக்குமே தகுதி இல்லையா என்றும் கேள்வி எழுப்பியிருந்தன. ( இம்புட்டு நாளும் எங்கே அய்யா இருந்தீர்கள்? கமிஷன் போதவில்லையா?) 

இதற்கு ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், ‘துணை வேந்தர் தேர்வு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற்றது. பல்கலைக்கழகம், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மட்டுமே நியமனம் நடைபெற்றுள்ளது. இதனை யாரும் அரசியலாக்க வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் இன்று (அக்டோபர் 6) உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்தது. என்னால் நம்ப முடியவில்லை. இதனைக் கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். இதுவரை 9 துணை வேந்தர்களை நியமனம் செய்துள்ளேன். அனைவரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள். தகுதி அடிப்படையில்தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற வேண்டும்” என்ற பேசியுள்ளார்.
துணை வேந்தர் நியமனத்தில் பணம் புரண்டதாக ஆளுநரே கூறியிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை வேந்தர்கள் நியமனம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: