புதன், 3 அக்டோபர், 2018

கமலஹாசன் : அதிமுக அரசு செயல்படவில்லை ...தமிழகத்தில் பாஜக அரசுதான் செயல்படுகிறதோ?

தினகரன் :சென்னை: தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சி செயல்படாத ஆட்சியாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல்ஹாசன் கூறினார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். தொடர்ந்து கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறியதாவது: 25 வருடங்களாக கிராமசபை கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. இங்கு நடக்கும் கிராம சபை கூட்டத்தை எங்கள் கட்சி சார்பில் பார்வையிட வந்தேன். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அதிகாரிகள் வாசிப்பதோடு மட்டுமின்றி, அந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முனையும்போது, மக்களின் கொந்தளிப்புக்கு ஆளாக நேரிடும். அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி தயாராக உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, ‘கமல்ஹாசன் சினிமாவில் முதல் இன்னிங்சிலும், அரசியலில் இரண்டாவது இன்னிங்சிலும் கால் வைத்துள்ளார்’ என்று கூறிய கருத்து பற்றி  கமலிடம் கேட்டதற்கு, ‘காந்தி முதல் இன்னிங்சை ஆப்பிரிக்காவிலும், இரண்டாவது இன்னிங்சை இந்தியாவிலும் கால் வைத்தார். எனவே யார் எப்படி வருகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. அவர்கள் வந்து என்ன  செய்யப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஆளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் செயல்படாத ஆட்சியாக உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் எங்கே பதவி பறிபோய்விடுமோ என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகிறார். அவர் பேசுவதற்கு நான் வேண்டுமானால் டிக்‌ஷனரி கூட வாங்கி தர தயாராக இருக்கிறேன். அதை படித்து பார்த்து விட்டாவது பேசட்டும்’ என்றார்.

கருத்துகள் இல்லை: