புதன், 3 அக்டோபர், 2018

நீதிபதி : மக்கள் போராடினால் ஆலையை மூடுவதா? .. ஸ்டெர்லைட் நீதிபதியின் வேதாந்தா பாசம்

மின்னம்பலம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகுக்கு 342 ஏக்கர் நிலம் ஒதுக்கியதை சிப்காட் மேலாளர் ரத்து செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொதுமேலாளர் சத்தியப்பிரியா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் இரண்டாவது அலகுக்காக 342 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுக்குக் குத்தகைக்குப் பெற்று சிப்காட்டுடன் உடன்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான பணத்தையும் சிப்காட்டுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிப்காட் மேலாளர் கடந்த மே 29ஆம் தேதி குத்தகையை ரத்து செய்துள்ளதை குறிப்பிட்டு, ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். குத்தகையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று(அக்டோபர் 3) நீதிபதி பார்த்திபன் முன்பு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர், எந்த முன்னறிவிப்பும் இன்றி குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களின் மிகப்பெரிய போராட்டத்தையடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், இது அரசின் முடிவு என்றும் அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அனைத்து ஆலைகளையும் மூட முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். நில குத்தகையை ரத்து செய்ய அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? அல்லது சட்ட ரீதியாக முடிவெடுக்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
குத்தகையை ரத்து செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: