வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

இடுக்கி அணையின் முழு மதகுகளும் திறப்பு ,, மக்கள் பதட்டத்தில்


மாலைமலர் :திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளத்தின் 22 அணைகள் நிரம்பி விட்டது. முழு கொள்ளளவை எட்டியதால் அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.
அணைகள் திறக்கப்பட்டதால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது போல 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 2 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும்.
இன்று அதிகாலையில் அணையின் நீர் மட்டம் 2401 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று மாலை அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று அதிகாலையில் அணையின் மேலும் 5 மதகுகள் திறக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இடுக்கி அணை திறக்கப்பட்டதால் இடுக்கி, செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை நீர் செல்லும் பாதையில் உள்ள மரங்கள், செடி கொடிகளை மீட்பு படையினர் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: