ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

பாலின மாற்று சிகிச்சைக்கு நிதியுதவி: கேரள அரசு!

பாலின மாற்று சிகிச்சைக்கு நிதியுதவி: கேரள அரசு!மின்னம்பலம்: குடும்பம், சமூகம் என அனைத்து இடங்களிலும் ஒதுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளை அளவிட முடியாது.
இந்த நிலையில், பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது திருநங்கைகள் பலரின் கனவாக உள்ளது. ஆனால், ஒரு சிலராலேயே அதைச் செய்துகொள்ள முடிகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சத்தை உதவித் தொகையாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'சமூக நீதித் துறையின் வழியாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இது உள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு திருநங்கைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசம் என முன்பு அறிமுகப்படுத்தி, இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இதில், ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. பெண் ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: