செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

எங்களால் எந்தவித சிக்கலும் வராது!' - ஸ்டாலினிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி

`எங்களால் எந்தவித சிக்கலும் வராது!' - ஸ்டாலினிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிசாமிவிகடன் - ஆ.விஜயானந்த் : தொடக்கத்தில் செயல் தலைவரின் கோரிக்கை குறித்து தீவிரமாக யோசித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர், சம்மதம் தெரிவித்துவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விளக்கியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். `உடல்நிலை குறித்து முதல்வரிடம் தெரிவித்துவிட்டுச் சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்துவிட்டார்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
கருணாநிதி உடல்நிலை, நிதின் கட்கரி வருகைசென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் கலைஞர் . நேற்று மாலை அவரின் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கையில், 24 மணி நேர கெடுவை விதித்திருந்தது மருத்துவமனை நிர்வாகம். நேற்று இரவிலிருந்தே கேள்வி குறியாக இருந்த கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. 'கலைஞர் அய்யா... அறிவாலயம் போகலாமா' எனத் தொண்டர்கள் முழக்கமிட்டுக்கொண்டே இருக்கின்றனர். கருணாநிதியின் உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், மிகுந்த கவலையில் இருக்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள். இதன் தொடர்ச்சியாக மருத்துவர்களின் ஆலோசனைபடி, சில முக்கிய முடிவுகளையும் அவர்கள் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து குடும்ப உறவுகளிடம் பேசினோம். ``கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக, நேரடியாக விவரிப்பதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்றார் ஸ்டாலின். இந்தச் சந்திப்பில் கனிமொழி, அழகிரி, முரசொலி செல்வம் உட்பட குடும்பத்தினர் பலரும் உடன் சென்றனர். கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக முதல்வருக்குத் தெரிவிக்க வேண்டியது சம்பிரதாயம். அதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு நடந்தது. 40 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்பில், கருணாநிதி தொடர்பாக ஒரு முக்கியக் கோரிக்கையையும் முன்வைத்தார் ஸ்டாலின்.
அந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நேரு, பொன்முடி உள்ளிட்டவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியபோது, முதல்வர் தரப்பிலிருந்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. இந்தத் தகவல் ஸ்டாலினுக்கு மன வருத்தத்தை உண்டாக்கியது. `கலைஞர் உடல்நலமில்லாமல் இருக்கும் நேரத்தில், டெல்லி தரப்பிலிருந்து அரசியல் செய்கிறார்களா' என்ற சந்தேகமும் அவருக்குள் இருக்கிறது. `குடும்பத்தைச் சேர்ந்த சிலரைக் கையில் எடுத்து, கட்சியை உடைக்கும் வேலைகள் நடந்துவிடுமோ' என்ற அச்சமும் குடும்பத்தினர் மத்தியில் உள்ளது. இதைச் சரிக்கட்டுவதற்காகக் குடும்பத்தின் முக்கிய வாரிசு ஒருவர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிப்பதையடுத்து, மத்திய அமைச்சர்கள் சிலர் மூலமாகவும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் கனிமொழி பேசினார். இதன் அடுத்தகட்டமாக, எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அவரும், `எங்களால் எந்தவிதச் சிக்கலும் இருக்காது' என உறுதியாகக் கூறிவிட்டார். இதற்குக் காரணம், மூத்த அமைச்சர் ஒருவர், கருணாநிதிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைகள் குறித்து முதல்வருக்கு விளக்கியதுதான்" என்றார் விரிவாக.
"செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர் குடும்பத்தினர். கடந்த 10 நாள்களாக அழுகையும் கவலையுமாகவே இருந்ததால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். முகத்தை மட்டும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலை குறித்து ட்வீட் செய்த பிரதமர், `அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்' எனத் தெரிவித்திருந்தார். இதன் பிறகு, காவேரி மருத்துவமனை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'பெரியவர்', 'தலைவர்' எனக் கருணாநிதியை விளித்தார். தொடக்கத்தில் செயல் தலைவரின் கோரிக்கை குறித்து தீவிரமாக யோசித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் சம்மதம் தெரிவித்துவிட்டார். முதல்வர் சந்திப்புக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயத் தொடங்கியிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.

கருத்துகள் இல்லை: