புதன், 8 ஆகஸ்ட், 2018

திருக்குவளை சோகத்தில் தத்தளிக்கிறது

துக்கத்தில் தத்தளித்த திருக்குவளை!மின்னம்பலம் :அமெரிக்கா கண் கலங்குகிறது, ரஷ்யா வருத்தப்படுகிறது. உலகளாவிய தமிழர்கள் எல்லாம் உள்ளம் குமுறுகிறார்கள் கலைஞரின் மறைவால். கலைஞருக்காக உலக வானமெல்லாம் அழும்போது உள்ளூர் வானம் அழாமல் இருக்குமா?
கலைஞர் கண் மலர்ந்த அவரது தாய் மண் திருக்குவளை துக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கலைஞரின் சொந்த கிராமமான திருக்குவளையில் ஊர் மக்கள் கூடி தங்கள் சோகத்தை பகிர்ந்துகொண்டனர்.
திருக்குவளையில் இருக்கும் கலைஞரின் சொந்த வீட்டின் முன் நேற்று இரவில் இருந்தே ஊர் ஜனம் கூடிவிட்டது. வாசலில் ஷாமியான போட்டு நாற்காலிகளும் போட்டு வைத்திருந்தனர். யாருமே இல்லாத வீட்டில் கலைஞரின் அளப்பரிய பொக்கிஷங்களான புகைப்படங்களும், அவருக்கு வந்த பழைய கடிதங்களும் , அவர் எழுதிய பழைய கடிதங்களும் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.


கலைஞரின் பிரிவைத் தாங்காத திருக்குவளை கிராமத்து தாய்மார்கள் ஒன்று திரண்டு கலைஞரின் இறப்பைத் தாங்க முடியாமல் கிராமத்து மரபின்படி ஒப்பாரி வைத்து மாரடித்துக் கொண்டு அழுதார்கள். வீட்டுக்குள் கலைஞரின் திருவுருவப் படத்தை வைத்து ஊர் மக்கள் எல்லாம் அஞ்சலி செலுத்தினார்கள்.
“கலைஞர் இந்த வீட்டை ரொம்ப நேசிச்சார். 96ல இங்க வந்தபோது அவர் ஒரு கடிதம் எழுதி வச்சிருக்காரு. நான் பிறந்த மண்ணுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப் போகிறேன்’ என்று எழுதி கையெழுத்து போட்டிருக்காரு. அவரோட பல வேலைகளுக்கு இடையில இங்க அடிக்கடி வர முடியாமல் போனாலும் நாங்க அவரை என்னிக்கும் மறக்கமாட்டோம்” என்கிறார்கள் திருக்குவளை கிராமத்து மக்கள்.

கருத்துகள் இல்லை: