வியாழன், 5 ஜூலை, 2018

விஜயகாந்த் அமெரிக்காவுக்கு ... மருத்துவ பயணம் .

மின்னம்பலம் : சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்  நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையிலும் சிங்கப்பூர் சென்றும் சிகிச்சை பெற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், ஒரு வாரகாலம் அங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் மேற்கொண்டார்.
உடல்நலமில்லாத நிலையிலும் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வருகிறார். நேற்று நடைபெற்ற தேமுதிக செயற்குழுக் கூட்டமும் நடைபெற்ற நிலையில், அதில் பல முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று (ஜூலை 5) தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர்/ பொதுச் செயலாளர் விஜயகாந்த் வரும் 07.07.2018 சனிக்கிழமை அன்று, சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். வழியனுப்புவதற்காக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநருக்கு எதிரான போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “மெதுவாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தெளிவான குரலுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளேன். வரும் செப்டம்பர் மாதம் நான் உங்களிடம் தெளிவாகப் பேசுவேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தெளிவான குரலுக்காக அறுவை சிகிச்சை செய்வதற்காகத்தான் விஜயகாந்த் அமெரிக்கா செல்கிறாரோ என்ற எதிர்பார்ப்பும் தேமுதிக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: