வியாழன், 5 ஜூலை, 2018

ஸ்டாலின் : ஏழு ஏக்கர் வெறும் 3 3.46 கோடிக்கு தமிழக அரசு .... ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு... சந்தை மதிப்பு 405 கோடி ரூபாய்!

சாராய ராமசாமி உடையார்
tamilthehindu :வீட்டு வசதி வாரியத்துக்கு
சொந்தமான நிலத்தை, ராமச்சந்திரா
அறக்கட்டளைக்கு முறைகேடாக விற்பனை செய்து அரசுக்கு 370 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ராமச்சந்திரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளைக்கு சென்னை திருவான்மியூரில் மிக முக்கியமான இடத்தில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடிமாட்டு விலைக்கு விற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சந்தை மதிப்பில் 405 கோடி ரூபாய் மதிப்பும், வழிகாட்டுதல் மதிப்பில் 267 கோடி ரூபாயும் உள்ள ஏழு ஏக்கர் நிலம் வெறும் 33.46 கோடி ரூபாய்க்கு விற்று அரசுக்கு ஏறக்குறைய 370 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பது தற்போது பத்திரிக்கை செய்திகள் வாயிலாக வெளிவந்திருக்கிறது.

சுகாதார அறக்கட்டளைக்கு என்று நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய அந்த அறக்கட்டளை இப்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டி கொள்ளை லாபம் அடிப்பதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், அதிமுக அரசும் உடந்தையாக இருந்திருக்கின்றன.

அரசு நிலத்தை வணிக நோக்கத்துடன் திருமண மண்டபம் கட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்து, அதற்கு விற்பனை பத்திரமும் பதிவு செய்திருப்பதில் இமாலய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல் அமைந்திருக்கிறது.
ஆகவே, ராமச்சந்திரா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்த இந்த ஏழு ஏக்கர் நிலம் விவகாரம் குறித்து உடனே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அரசுக்கு 370 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீதும், தொடர்புடைய அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”  என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: