புதன், 4 ஜூலை, 2018

எடப்பாடி முடக்கிய புதிய பேருந்துகள்... ஜெயா பாணி அடாவடி அல்பத்தனம்

மின்னம்பலம் :சென்னையில் முடங்கிய புதிய பேருந்துகள்!"
நேற்று முதல்வர் கொடியசைத்துத் தொடங்கிவைத்த புதிய பேருந்துகள் வெளியூருக்குச் செல்லாமல், சென்னையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. பயணிகளின்றிப் பேருந்துகளை அந்தந்தப் பகுதிகளுக்கு இயக்கக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், பேருந்துகள் சென்னையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட புதிய நவீன புதிய 515 பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 3) தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்காகத் திங்கள்கிழமை இரவே பேருந்துகள் சென்னைக்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்றன. அன்றிலிருந்து ஓட்டுநர், நடத்துநர்களும் இங்கேயே தங்கினர்.
நேற்று விழா முடிந்த பின்னர், புதிய பேருந்துகளை சென்னை கோயம்பேட்டிற்குக் கொண்டு செல்லுமாறு ஓட்டுநர்களுக்குப் போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பேருந்துகளில் பயணிகள் இருந்தால் மட்டுமே அந்தந்த மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்க முடியும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 80 புதிய பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதுபோன்று, ஈரோடு,சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளும் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், அதிருப்தி அடைந்த ஓட்டுநர், நடத்துநர்கள், கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு போதுமான உணவு, தங்குவதற்கான இடம், உடை இல்லாமல் இருக்கிறோம். எங்களை சொந்த மாவட்டங்களுக்குப் பேருந்துகளுடன் அனுப்புவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து, குறைந்த அளவிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு பேருந்துகளும் நகர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: