செவ்வாய், 3 ஜூலை, 2018

திமுகவின் மண்டகசாயம்.. 24 மணி நேரமும் எ.வ. வேலுவின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டாலின்?

பணம் இருக்குன்றதுக்காக கட்சி மாறி வந்தவனை பீடத்துல உக்கார வைச்சி அழகு பாத்தா, 40 வருசமா கட்சியில இருக்குற எங்களை மாதிரி ஆளுக்கு என்ன மரியாதை ? எதுக்கு நாங்க கட்சியில இருக்கணும் ? வேலு மாதிரி ஒரு பச்சோந்தியை தளபதி இப்படி நம்பறாரேன்னு அவ்வளவு வேதனையா இருக்கு. ஆனா நாங்க இதை யாருகிட்ட சொல்ல முடியும். வேலுவை தாண்டி தளபதியை யாரும் நெருங்கக் கூட முடியாது.
savukkuonline.com : இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, வேலுவை பற்றி இப்படி பேசினார் “உங்களை வழிநடத்தும் அண்ணன் வேலு, உங்களை மட்டும் வழிநடத்தவில்லை.   திமுகவையும் வழிநடத்துகிறார்.  தளபதியையும் வழி நடத்துகிறார்.   அண்ணன் வேலு மட்டும் இல்லையென்றால் திமுக 89 எம்எல்ஏக்களை பெற்றிருக்கவே முடியாது.”
வேலுவின் செல்வாக்கு அத்தகையது. இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  அழித்து நசுக்கி விடுவார்.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர்.  அதுதான் அவரது சொந்த ஊர்.   வேலு பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.   பின்னர் அவர் நடத்தும் பாலிடெக்னிக்கில் படித்த இளங்கோ என்ற மாணவர், வேலுவுக்காக எம்ஏ தேர்வு எழுதினார்.  இப்போது வேலு எம்.ஏ பட்டதாரி.   வேலுவுக்காக தேர்வெழுதிய அந்த இளங்கோ மர்மமான முறையில்  சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனார்.
வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது.    பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் வேலு.  பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் இணைந்தார் வேலு.   தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது. 
77 தேர்தலில் தண்டாரம்பட்டு தொகுதிக்காக அலைந்தாலும் வேலுவுக்கு அது கிடைக்கவில்லை.   ஆனால் இவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருந்த்து.   அப்போது அதிமுகவில் செல்வாக்காக இருந்த அமைச்சரான ப.உ.சண்முகத்துக்கு அல்லக்கையாக தன்னை மாற்றிக் கொள்கிறார் வேலு.    1984ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், தண்டாரம்பட்டு சீட் வேண்டும் என்று போராடுகிறார் வேலு.   ப.உ.சண்முகத்தின் அல்லக்கையாக சிறப்பாக பணியாற்றியதால், அவர் பரிந்துரையில் தண்டாரம்பட்டு சீட் கிடைத்து எம்எல்ஏவாகிறார் வேலு.
ஜெகதரட்சகன், விஐடி விஸ்வநாதன், முனிரத்னம், ஜேப்பியார் போன்றோர் திடீர் கல்வித் தந்தைகளாக உருவெடுத்தது போலவே வேலுவும் கல்வித் தந்தையாகிறார்.
இன்று வேலு கீழ்கண்ட கல்வி நிலையங்களுக்கு உரிமையாளர்.
அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவ வேலு உறைவிடப் பள்ளி, கரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை.  ராமச்சந்திர உடையார் மற்றும் ஜேப்பியாரைப் போலவே, வேலுவும் எம்ஜிஆரின் பினாமியாக இருந்தே கல்வித் தந்தை ஆகிறார்.   திருவண்ணாமலைக்கு கருணாநிதியோ, ஸ்டாலினோ வந்தால், அருணை கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார்கள்.
எம்ஜிஆர் இறந்ததும், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை இறக்கி விட்ட புகழுக்கு இவரும் கேபி.ராமலிங்கமும் சொந்தக்காரர்கள்.  அந்த சம்பவம் வேலுவை புகழடைய வைக்கிறது.
89 தேர்தலில் ஜானகி அணியில் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவுகிறார் வேலு.   பின்னர் ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதும், ஜெயலலிதா  அணிக்கு தாவ முயற்சி செய்கிறார் வேலு.  ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு ஒரு பட்டுப் புடவை பரிசளித்து, அந்த கூடாரத்தில் நுழைய முயற்சித்தார்.  ஆனால் ஜெயலலிதா இவரை ஏற்கவில்லை.
பின்னர் ஆர்எம்.வீரப்பன் தொடங்கிய எம்ஜிஆர் கழகத்தில் இணைந்தார் வேலு.   எம்ஜிஆர் கழகத்தின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துக்கு அத்தனை செலவும் வேலுதான்.
கே.பாக்யராஜ், 1989ம் ஆண்டு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்குகிறார்.  அதில் இணைந்த வேலு, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகிறார்.    பின்னர் பாக்யராஜ் கட்சி தேராது என்று தெரிந்ததும் அதிலிருந்து  வெளியேறி, திரைத் துறையில் கால் பதிக்கிறார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இயக்குநர் வி.சேகர் எடுத்த, நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்ற படங்கள் வேலுவின் தயாரிப்புதான்.  1992ம் ஆண்டு வெளியான திலகம் என்ற படத்தில் வேலு வில்லனாக நடித்துள்ளார்.   நல்ல வேளை, நடிப்பு ஆசையை அப்படியே நிறுத்தி விட்டார்.   தொடர்ந்து நடித்திருந்தால் தமிழகத்தில் பாதி பேர் செத்திருப்பார்கள்.

மீண்டும் ஜெயலலிதாவிடம் இணைவதற்காக “’புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்” என்ற புத்தகத்தைத் தயாரித்து, கவிஞர் வாலியிடம் அணிந்துரையும் வாங்கி, அச்சடித்து வைத்து இருந்த நேரத்தில்,  தமிழகத்தில் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலை.  இந்த நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டால் போணியாகாது என்பதை உணர்ந்து, அப்போது பாட்சா திரைப்பட 100வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், ரஜினி பக்கம் சாய்ந்தார்.     அப்போது திருவண்ணாமலையில், பட்டுச் சேலைகளை தானமாக அளித்து, ஒரு யாகம் நடத்தப்பட்டது.   அதன் முழுச் செலவும் வேலுதான்.
பின்னர் 1996ல், மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் பார்த்தார்.  ஆனால் மூப்பனார் இவரை சேர்க்கவில்லை.
அடுத்து வேலு, திமுக பக்கம் கண் பதித்தார்.   1993ல் ராணிப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்கு வந்த கருணாநிதி மீது தாக்குதல் நடைபெற்றது.  அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர் வேலுதான்.  இது போல, திருவண்ணாமலையில், திமுக தலையே தூக்க விடாமல் தொடர்ந்து செயல்பட்டவர் வேலுதான் என்பதால், திமுக உள்ளே அவரை நுழைய விடக் கூடாது என்று பலர் முனைப்பாக இருந்தவர்.  ஆனால், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த செ.மாதவனை பிடித்து, திமுகவில் நுழைந்தார் வேலு.
திமுகவில் நுழைந்த்தும், முக்கிய புள்ளிகள் யாரென்று பார்த்து, துரைமுருகன் மற்றும் பொன்முடியை கையில் போட்டுக் கொண்டார் வேலு.  இருவருக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து சப்ளைகளையும்  செய்தது வேலுதான்.  பொன்முடியின் பெயரை பொன்குடி என்றே வைக்கலாம்.  அப்படி சரக்கு அடிப்பார்.  ஒரு நாள் இரவில் இரண்டு புல் பாட்டில்களை சாதாரணமாக காலி செய்வார்.

ஆ.ராசா 2ஜி வழக்குக்காக டெல்லிக்கு அலைந்தபோது, பொன்முடிக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தே என் பணமெல்லாம் காலியாகி விடும் என்று கூறியதாக சொல்வார்கள்.
திமுகவில் நுழைந்ததும்,  வேலுவின் செல்வாக்கு கடகடவென்று வளர்கிறது.   திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதா கோவிந்தன் நாயுடு என்பவர், முரசொலி செல்வத்தோடு கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்.   முரசொலி செல்வம், பொன்முடி, ராணிப்பேட்டை காந்தி, துரை முருகன் ஆகியோர் அவ்வப்போது, வெளியூர்களுக்கு சென்று தங்கி சரக்கு போடுவது வழக்கம்.    அந்த குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட வேலு, அனைத்து பார்ட்டிகளுக்குமான செலவை அவரே ஏற்றுக் கொள்வார்.  இதனால் வேலுவை அனைவருக்கும் பிடித்துப் போனது.
திமுக நிர்வாகிகள் நியமன சமயத்தில், முரசொலி செல்வம், ராதா கோவிந்தன் நாயுடுவை தலைமைச் செயற்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முயற்சிக்கிறார்.   முடிவு திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பிச்சாண்டியிடம் விடப்படுகிறது.  ஸ்டாலின் செய்யாறு அன்பழகனை தலைமைச் செயற்குழுவுக்கு பரிந்துரைக்க, பிச்சாண்டியும் அன்பழகனையே தேர்ந்தெடுக்கிறார்.
முரசொலி செல்வத்துக்கு தன்னுடைய பிரதிநிதி ராதா கோவிந்தன் நாயுடு தேர்ந்தெடுக்கப் படாதது  கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  இதனால், வேலுவை மாவட்டச் செயலாளர் ஆக்குவது என்று முடிவெடுக்கிகறார்.
2003ம் ஆண்டு நடந்த கட்சித் தேர்தலில், பிச்சாண்டிக்கு எதிராக போட்டியிடுகிறார் வேலு.   திமுகவினரின் கணிசமான வாக்குகளை வைத்திருந்த வேணுகோபால் மற்றும் பெ.சு.திருவேங்கடத்தை தன் பண செல்வாக்கால் கவர்கிறார் வேலு.   இறுதியாக முடிவெடுக்க வேண்டியது போளுர் ராஜேந்திரன்.    போளுர் ராஜேந்திரனை வளைக்கிறார் வேலு.  போளுர் ராஜேந்திரனும் தன்னுடைய ஆதரவை வேலுவுக்கே வழங்க, பிச்சாண்டியை வீழ்த்தி மாவட்டச் செயலாளர் ஆகிறார் வேலு.
2001ம் ஆண்டு, திமுகவின் சார்பில் பொங்கல் விழா நடைபெறுகிறது.  அந்த பொங்கல் விழாவின் மொத்த செலவையும் வேலு ஏற்றுக் கொள்கிறார்.   அப்போது, கேடி சகோதரர்கள், கருணாநிதிக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக அளித்திருந்தனர்.  அந்த காரில் கருணாநிதி ஏறும்போது, அவரிடம், பொன்முடி, விழாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டது வேலுதான் என்றும், அவரையும் காரில் அழைத்துச் செல்லலாமே என்று கூறவும் கருணாநிதி அவரை காரில் ஏற்றிக் கொள்கிறார்.   அவ்வளவுதான். அதன் பின், கோபாலபுரத்தில், மளிகை செலவு முதல், பாத்திர பண்டங்கள் வாங்குவது வரை அத்தனையும் வேலுவின் செலவுதான்.    கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டில் இன்று இயங்கும் பவர் பேக்அப் ஜெனரேட்டர், வேலுவின் உபயமே.
கருணாநிதி காரில் ஏறியது போலவே, ஸ்டாலினின் காரிலும் வேலு ஏறிக் கொண்டார்.  இன்று வரை இறங்கவேயில்லை.  சித்தரஞ்சன் சாலையில் ஸ்டாலினின் வீட்டு செலவுகள் அனைத்தையும் செய்வது வேலுவே.  ஏறக்குறைய ஸ்டாலின் வீட்டின் உறுப்பினராகவே மாறி விட்டார் வேலு.
2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற, கருணாநிதி வேலுவின் கல்லூரியில் தங்கியிருந்தார்.  அப்போது அவரை பார்ப்பதற்காக, ப.உ.சண்முகம், அவர் மகன் ராஜாவோடு கல்லூரிக்கு வந்தார்.  அப்போது வேலு அவர் அருகில் இருந்தவரிடம் சொல்லியது, “இந்த ஆளு இப்போ எதுக்கு வர்றாரு ?”  ப.உ.சண்முகம் இல்லையென்றால், வேலு அரசியலுக்கே வந்திருக்க முடியாது.  இதுதான் வேலுவின் உண்மையான குணம்.
வேலு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.  அவர் மனைவி சரஸ்வதி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்.     இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் கம்பன்.  இளைய மகன் குமரன்.  வேலுவின் அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த சில முறைகேடுகளுக்காக அக்கல்லூரியின் இணைப்பையே அண்ணா பல்கலைக்கழகம், ரத்து செய்தது.  இணைப்பு
இன்று திமுகவில் அனைத்தும் எவ.வேலுதான்.  எப்படியும் அடுத்து பொருளாளர் பதவியை பிடிப்பேன் என்பதில் தீவிரமாக உள்ளார் வேலு.   ஸ்டாலின் வீட்டில் பெரும்பாலான முடிவுகள் வேலுவின் ஆலோசனையின்படியே நடக்கின்றன.     துர்கா ஸ்டாலினைப் பார்த்தால், தளபதி எப்போ சிஎம் ஆவாருன்னு ஜனங்க தவம் கிடக்கிறாங்க  அண்ணி என்பார்.  துர்கா புளகாங்கிதம் அடைவார்.  அண்ணி,  வரப்போற தேர்தல்லயே நம்ப தம்பி உதயை நிக்க வைச்சிடணும்.    தம்பிதான் பார்ட்டியோட ப்யூச்சர் என்று துர்காவுக்கு எது பிடிக்குமோ அதை பேசுவார்.
இன்று ஏறக்குறைய திமுகவின் மாவட்டச் செயலாளர்களில் பாதி பேர் வேலுவின் கைகளில்.   ஸ்டாலினை விட திமுகவை வேலு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
சமீபத்தில் ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி, திமுக தலைவர்களின் மீதான புகார்களை தொண்டர்களிடமிருந்து பெற்றார் ஸ்டாலின்.  அந்த புகார்களில் எது ஸ்டாலின் கண்களுக்கு செல்ல வேண்டும் என்பதையும் வேலுதான் முடிவு செய்தார்.  வேலுவின் ஆட்கள் மீதான ஒரு புகார் கூட தலைமையின் கண்களுக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொண்டார் வேலு.
அறிவாலயத்தில் உள்ள அத்தனை பேரும் வேலுவின் ஆட்களே.  அறிவாலயத்தில் வேலுவுக்கு தெரியாமல் எதுவுமே நடக்காது.   தற்போது திமுகவின்  அரசியல் யுக்தியை உருவாக்கி செயல்படுத்தும் பணி, OMG என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.    ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள், ட்வீட்டுகள் போன்ற அனைத்தையும் முடிவு செய்வது இந்த டீம்தான்.  இந்த டீமில் சுனிலைத் தவிர்த்து, முக்கிய நபராக உள்ளவர் தினேஷ்.  இந்த தினேஷ் மற்றும் சுனில் ஆகிய இருவருமே வேலுவின் ஆட்கள்தான்.

ஸ்டாலினோடு 24 மணி நேரமும் இருக்கும் தினேஷ். இவரும் எவ.வேலுவின் கையாள்
முழுமையாக திமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலு, அடுத்து இலக்கு வைத்திருப்பது, திமுக பொருளாளர் பதவி.   எப்படியும் திமுக பொருளாளர் ஆகி விடுவேன் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கும் வேலுவுக்கு, இதோடு சேர்ந்து முதல்வர் ஆசையும் உள்ளது.   எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல், பல அரசியல்வாதிகள் மனதில் உள்ள எண்ணம், இவனெல்லாம் சிஎம் ஆகும்போது நாம ஆகக் கூடாதா என்பதே.  அந்த எண்ணம் வேலுவையும் விட்டு வைக்கவில்லை.  தனது ஆதரவாளர்களிடம் நான் முதல்வராகும் நேரம் வந்தாலும் வரலாம் என்று கூறியுள்ளார்.
சாதாரண பம்ப்பு செட் மெக்கானிக்காக இருந்த வேலு, இன்று கல்வித் தந்தை ஆகியுள்ளார்.  அமைச்சர் ஆகியுள்ளார்.  நாளை முதல்வராகலாம்.  யார் கண்டார்கள் ?
திமுகவில் ஸ்டாலினோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இருந்தனர்.  ஆனால் இன்று ஒருவர் கூட அவரோடு இல்லாதபடி செய்தவர்தான் வேலு.   ஈஏபி.சிவாஜி, பரிதி இளம் வழுதி, துறைமுகம் பலராமன், எழும்பூர் கலை, திருச்சி பரணி குமார், சுகவனம், நாகை விஜயன், என்கேகேபி.ராஜா, திருவாரூர் அசோகன் என்று இந்த பட்டியல் நீளமானது.  ஆனால் இன்று ஸ்டாலினுக்கு எல்லாமுமாக உருவாகி நிற்பவர் வேலு மட்டுமே.
ஸ்டாலின் என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், என்ன முடிவெடுக்கிறார் என்ற அனைத்தையும் வேலு முன்னதாகவே தெரிந்து கொள்கிறார்.  ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு.    வேலுவின் கைப்பாவையாகவே ஸ்டாலின் மாறி விட்டார் என்றே கூறலாம்.
தற்போது கலைஞர் செய்தி சேனலையும் கைப்பற்றி விட்டார் மண்டக்கசாயம்.    கலைஞர் நியூஸ் செய்திச் சேனலை புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.   அதற்காக ஒரு புதிய செய்தி ஆசிரியரை தேடிக் கொண்டிருந்தார்கள்.   இதில் இருவரின் பெயர்களை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  அந்த நேரத்தில் இறுதி செய்யப்பட்ட அந்த பெயர்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே விடப் படுகின்றன.
தற்போது ஜுனியர் விகடனிலிருந்து கலைஞர் நியூஸ் செய்தி சேனலின் ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பவர், பா. திருமாவேலன்.   மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்.   திராவிட அரசியலை இவரைப் போல அலசுபவர்களை பார்க்கவே முடியாது.  சிறப்பான எழுத்தாளர்.   இதில் விசேடம் என்னவென்றால், ஜுனியர் விகடனில் சேர்வதற்கு முன்னதாக, எவ.வேலு நடத்திய தென் திசை பதிப்பகத்தில் வேலை பார்த்தவர்தான் திருமாவேலன்.   தற்போது திருமாவேலன் மூலமாக கலைஞர் நியூஸ் செய்தி சேனலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் வேலு.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு முன்னணி திமுக தொண்டர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேசினார். “இன்னொரு கட்சியில இருந்து வர்றவங்களை சேத்துக்க வேண்டியதுதான். இல்லன்னு சொல்லல.  ஆனா அப்படி வேற கட்சியில இருந்து வர்றவங்களை உரிய இடத்துல வைக்கணும்.   ஆயிரம்தான் இருந்தாலும் அவன் இன்னொரு கட்சியில இருந்தவன்தானே…  இன்னைக்கு எதுக்கு திமுகவுக்கு வர்றான் ?  பதவி வாங்கி தன்னை முன்னேத்திக்கணும்னுதானே ?  அவனை உரிய இடத்துல வைக்க வேணாமா ?
பணம் இருக்குன்றதுக்காக கட்சி மாறி வந்தவனை பீடத்துல உக்கார வைச்சி அழகு பாத்தா, 40 வருசமா கட்சியில இருக்குற எங்களை மாதிரி ஆளுக்கு என்ன மரியாதை ?  எதுக்கு நாங்க கட்சியில இருக்கணும் ?
வேலு மாதிரி ஒரு பச்சோந்தியை தளபதி இப்படி நம்பறாரேன்னு அவ்வளவு வேதனையா இருக்கு.  ஆனா நாங்க இதை யாருகிட்ட சொல்ல முடியும்.  வேலுவை தாண்டி தளபதியை யாரும் நெருங்கக்  கூட முடியாது.  அப்படி இருக்கும்போது யாரு போயி வேலுவை பத்தி தளபதிக்கிட்ட சொல்ல முடியும் ?  அது இல்லாம இந்த விஷயமெல்லாம் தளபதிக்கு தெரியாதா என்ன ?  எல்லாம் தெரிஞ்சும் கட்சி மாறி வந்த ஒருத்தனை கூடவே வச்சிக்கிட்டு சுத்தறாரு.  எப்படி இந்த கட்சி விளங்கும்னு சொல்லுங்க” என்றார்.
இது அந்த தொண்டரின் கருத்து மட்டுமல்ல.   திமுகவில் பெரும்பாலான தொண்டர்களின் கருத்தும் இதுதான்.   ஆனால், ஸ்டாலின் இதையெல்லாம் பார்த்து, திருந்தும் பக்குவம் இல்லாதவர்.  அவருக்கு மனதுக்கு இதமான கருத்துக்களை மட்டுமே கேட்பதற்கு பிடிக்கிறது.  விமர்சனங்களை அவர் விரும்புவதில்லை.  ஏறக்குறைய மண்ணில் தலை புதைத்துக் கொண்ட நெருப்புக் கோழியைப் போலத்தான் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டு வருகிறார்.

திமுகவின் நடவடிக்கைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு நபர் கூட ஸ்டாலின் அருகே இல்லை.     அவர் தந்தை எழுதிய குறளோவியத்தை ஸ்டாலின் படித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.   இப்போதாவது படிக்கவும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

கருத்துகள் இல்லை: