வெள்ளி, 6 ஜூலை, 2018

உட்கார்ந்துகொண்டே வேலை: சட்டத்தில் திருத்தம்!

உட்கார்ந்துகொண்டே வேலை: சட்டத்தில் திருத்தம்!
மின்னம்பலம்: கேரளாவில், கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்ய முடியும்.
பொதுவாக, நகை மற்றும் துணிக்கடை, ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகளில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை கால் கடுக்க நின்றுகொண்டுதான் வேலை செய்ய வேண்டும். வாடிக்கையாளர் இல்லாத சூழ்நிலையிலும் கூட நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். 12 மணி நேரம் நின்றுகொண்டே இருப்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. அதனால், தாங்கள் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பெண்கள் 2013ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டப்படி, ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் உட்கார்ந்துகொண்டு வேலை செய்ய உரிமை இருக்கிறது. இந்த விதி ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வணிக நிறுவனங்களின் சட்டத்தை திருத்துவதற்காக மாநில அரசு முயற்சி செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விரைவில் நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்ய முடியும் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை: