வியாழன், 5 ஜூலை, 2018

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - தீர்ப்பை வாசித்து காட்டிய கிரண்பேடி

மாலைமலர் :யூனியன் பிரதேசங்களில்  அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி: நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.


இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
VIDEO : ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்

கருத்துகள் இல்லை: